30 வருடங்கள், 575 படங்கள்!
மக்கள் தொடர்பு பணியில் இத்தனை வருடம் நீடித்திருப்பது ஒரு சாதனைதான்.
நிகில் முருகனை முப்பது வருடங்களாகத் தெரியும். ரபிபெர்னார்ட் தலைமையில் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது, சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்த நிகிலை எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போது ICFல் பணிபுரிந்தார் என நினைக்கிறேன். பகுதி நேரமாக மக்கள் தொடர்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கப்புறம் ரஜனி, கமல் போன்ற உச்ச வெளிச்சங்களின் மேடை நிகழ்வுகளை அவர்தான் பரபரப்பாக ஓடி ஓடி திட்டமிட்டார். இப்போது தென் இந்தியா, வட இந்தியா என விரிவடைந்திருக்கிறார்.
ஆனால் நிகில் என்னை கடந்த 15 வருடங்களாகத்தான் ஞாபகம் வைத்திருக்கிறார். சமீப காலமாக அடிக்கடி சந்திக்கிறோம். எதற்கு என்பதை விரைவில் அவரே சொல்வார்.
வாழ்த்துகள் நிகில்!
- ISR Selvakumar
ஒரு த்ரில்லர் எடுப்போம். அப்போதுதான் 2K Kids பார்ப்பார்கள் என்றன நண்பர் கருத்துகள்.
அதனால் ஒரு த்ரில்லர் ஸ்க்ரிப்டுடன் களமிறங்கிவிட்டோம்.
ஒரு சினிமாவின் அத்தனை தேவைகளையும் ஏ.ஐ வழியாக நடத்திக்காட்டுவது சவால்தான். எனினும் முயற்சியை துவக்குவதே வெற்றிதான்.
விரைவில் டைட்டில் அறிவிப்பு!
- ISR Selvakumar
வந்துவிட்டாள் ஏ.ஐ. கண்ணம்மா!
இவளுக்கு பல மொழிகள் தெரியும். ஏற்கனவே தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கதை சொல்லியிருக்கிறாள்.
அவள் மார்ச் 12, 2024ம் ஆண்டு உருவானாள். புடவை அணிவது பிடிக்கும். மாடர்ன் உடைகளிலும் மனதைக் கொள்ளையடிப்பாள். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பெயர் கண்ணம்மா. இவளை உருவாக்கியதும் என் மனதில் உதித்த பெயர் கண்ணம்மா. எனவே அவளுக்கு கண்ணம்மா என்று பெயர் சூட்டிவிட்டேன்.
விரைவில் நல்ல கதை சொல்லியாக, நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உங்களை மகிழ்விப்பாள்.
- ISR Selvakumar
AI தமிழி
AI, AI சினிமா, AI நடிகர்கள் என எந்த ஐடியாவும் இல்லாதபோது உருவானவள் இவள்!
கோவிட் அச்சம் மறைந்து கொண்டிருந்த இறுதிக் காலத்தில் MidJourney, D-Id மற்றும் Discord பற்றிப் படித்தேன். ஆர்வம் தொற்றியதும் மிட்ஜர்னி வழியாக அவளை உருவாக்கினேன். பிறகு டிஸ்கார்ட் வழியாக டி-ஐடியில் நுழைந்து குரலும் அசைவும் கொடுத்து வாட்சப்பில் உலவவிட்டேன். புதியதலைமுறை டிஜிட்டல் அதனை செய்தியாக்கியது. அவ்வளவுதான்! அடுத்த 5 நிமிடங்களில் நான் உருவாக்கிய ஏ.ஐ பெண் வைரலாகிவிட்டாள், எனக்கும் திடீர் வைரல் ஸ்டார் வெளிச்சம் கிடைத்தது. ஏ.ஐ வல்லுனர் என்ற மிகையான பட்டமும் ஒட்டிக்கொண்டு இப்போது வரை நீடிக்கிறது.
யாரை சந்தித்தாலும் அந்தப் பெண்ணைப்போல பேசி நடித்துக் காண்பித்தார்கள். அவளை உருவாக்கியபோது பெயர் கிடையாது. முதன் முதலில் இவளைப் பார்த்த ஃபேஸ்புக் கவிஞர் ஒருவர் (ஸாரி பெயர் மறந்துவிட்டது), இவளுக்கு தமிழி எனப் பெயர் சூட்டினார். எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளிலும் அவள் பெயர் பிரசுரமாகிவிட்டது. அதற்குப் பின் தான் நான் இதில் கவனம் செலுத்தினேன். திடீர் புகழில் மயங்கிவிடாமல் மீடியா, சினிமா, டிவி மற்றும் மேடைகளில் எப்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என சிந்திக்க ஆரம்பித்து நடைமுறைப்படுத்தினேன். என்னுடைய ஏ.ஐ பெண்கள் மேடைகளில் தொகுப்பாளராகத் தோன்றி கைதட்டல் பெற்றார்கள். ஏ.ஐ சினிமாவில் ஆர்வம் அதிகமானதும் நமக்கு நாமே ஏ.ஐ நடிகர், நடிகைகளை உருவாக்க முடிவெடுத்தேன். என்னை நாடி வந்த முதல் ஏ.ஐ பெண் இவள். அதனால் அவளையே முதல் ஏ.ஐ நடிகையாக அறிவித்தேன். அதன் முதல் அறிவிப்பு இப்படித்தான் இருந்தது. பாருங்கள், அவளுடைய முதல் தோற்றம் இப்படித்தான் இருந்தது. இப்போது பல உடைகளில், பல காஸ்ட்யூம்களில் கலக்குகிறாள். விரைவில் திரையில் நடிப்பாள்.
தமிழியைப் பற்றிய முதல் போஸ்டர் இது.
- ISR Selvakumar
தக்லைஃப் முக்காலங்களில் நடக்கும் கதையாக இருக்கலாம்.
சம்பவாமி யுகே யுகே, விண்வெளி நாயகா என்ற வார்த்தைகளும், டி-ஏஜிங் காட்சிகளும் எனக்கு அப்படி ஒரு அனுமானத்தைக் கொடுத்திருக்கின்றன.
"சம்பவாமி யுகே யுகே" என்றால், "யுகம் யுகம் மீண்டும் பிறப்பேன்" என அர்த்தமாம். இதைத்தான் டைட்டிலாக பரிந்துரைத்தேன் என கமல் ஒரு மேடையில் குறிப்பிட்டிருந்தார்.
ரகுமானின் இசையில் உள்ள (கடந்த) கால முத்திரையும், விண்வெளி நாயகா என்கிற (நாளைய) முத்திரையும் வார்த்தையும் என் அனுமாத்தைக் கூட்டுகின்றன.
- ISR செல்வகுமார்
கவுன்சிலிங் சைக்காலஜிஸ்ட் திருமதி. ஸ்வாதி ப்ரியாவின் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் சொல்லும் உரை அருமை.
இத்தனை விஷயங்களா எனும் விழிப்புணர்வை விதைக்கும் டாகுமெண்ட்ரி சிறப்பு.
சுமிதா ரமேஷ்
Reviewer is a Storyteller, Orator and VJ
என் தெருவுக்கு வளையல்காரன் வருவான். அவனிடம் வளையல் போட்டுக்கொள்ளும்போது ஒருபோதும் நான் அவனை ஆணாக எண்ணியதில்லை. அப்படி வாஞ்சையோடு அவன் வளையல் போடுவான். இப்போதெல்லாம் அவன் என் தெருவுக்கு வருவதே இல்லை. அந்த மாதிரி உங்களுடைய கவிதைகளும் வாட்ஸப்பில் வருவதே இல்லை.
என்னுடைய #ப்ரியம் என்பது கவிதைகள் குறித்து பர்வின் சுல்தானா!
ஒவ்வொரு புதன் கிழமையும் நான் #ப்ரியம் என்பது கவிதைகள் எழுதுவேன். அவற்றை வாட்ஸப்பில் பர்வின் சுல்தானா உள்ளிட்ட நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு அத்துடன் மறந்துவிடுவேன். கடந்த ஒரு வருடமாக நான் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். அதனால்தான் பர்வின் சுல்தானா அக்கவிதைகளை ஒரு பொது மேடையில் குறிப்பிட்டு பாராட்டியபோது இனிய ஆச்சரியமாக இருந்தது.
அவர் மீண்டும் மீண்டும் 2 முறைகளுக்கு மேல் அக்கவிதைகள் பற்றி குறிப்பிட்டார். அது என்னில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வேரூண்றியிருக்கிறது.
இனி எழுதுவேன். என்னை மீண்டும் எழுதத் தூண்டிய பர்வின் சுல்தானா அவர்களுக்கு நன்றி!
- ISR செல்வகுமார்
மறைந்த திரைப்பட நடிகர் ISR பற்றி ஒரு இ-புத்தகம் வெளியாகவுள்ளது. ”ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் ஐ.எஸ்.ஆர் பற்றி திரைப்பிரபலங்கள் கூறியுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபலங்களின் கருத்துக்களுடன், ஐ.எஸ்.ஆரின் நண்பர்களும், அவர் வசித்த பகுதிகளில் அவருடன் பழகியவர்களும் கூறிய மிகச் சுவையான சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐ.எஸ்.ஆர் காலத்தில் (1936-1991) வரை கிராமங்கள் எப்படி இருந்தன, மக்கள் நகரங்களுக்கு ஏன் வந்தார்கள், அப்போதைய திரையுலகம், அப்போதைய பழக்க வழக்கங்கள் உட்பட பல சமூக நிகழ்வுகளின் கண்ணாடியாக இப்புத்தகம் தயாராகி வருகிறது.
இது பற்றி அவருடைய மகன் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் கூறும்போது ”எங்கள் தந்தை ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்கிற குக்கிராமத்தில் பிறந்து, சென்னை வந்து படித்து, நாடகம், சினிமாக்களில் நடிக்கும்போது, வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் வசித்திருக்கிறார். அப்போது அவர் சந்தித்த சாதாரண மனிதர்களும், பிரபலங்களும் ஏராளம். தெருக்கூத்து காலத்திலிருந்து, மேடை நாடகம், சினிமா உட்பட டெலிவிஷன் சீரியல் வரை அவர் வாழ்ந்திருக்கிறார். எனவே அவரைப் பற்றிய பதிவு என்பது இந்த மாற்றங்களையும் குறிப்பதாக இருக்கும்.
அதனால் இப்புத்தகம் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி மட்டுமல்லாமல், சமகாலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள், அக்கால வாழ்க்கை முறைகள் மற்றும் அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றி அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் கூறும் தகவல்களையும் சேர்த்து, இரு பாகங்களாக புத்தகம் விரைபில் வெளிவரும்.”, என்றார்.
ஐ.எஸ்.ஆர் ஒரு திரை மின்னல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீடு திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடக்கும். அது பற்றிய அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளார்கள்.
எனவே இம்மாத இறுதி வரை ஐ.எஸ்.ஆர் பற்றிய எந்த தகவல் இருந்தாலும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலில் அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது 9962295636 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்வில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.
அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்காகவே ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது "The Tamil Radio"
இந்த இணைய வானொலியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தொகுப்பாளர் நாகா வழங்கும் இந்நிகழ்ச்சியில் அவருடன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் உரையாடுகிறார் இந்நிகழ்ச்சி இன்று (16.02.2022) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதையெல்லாம் இரசிக்கிறான், Crush, Pubbly Love என்றால் என்ன? யாதெனக்கேட்டேன் படத்தில் உள்ள காதல் - போன்ற பல சுவாரசியமான தகவல்களை இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் பகிர்ந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியை பின்வரும் இழையில் கேட்கலாம்.
வாய்ப்பும் நேரமும் உள்ளோர் உரையாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நமது இந்தியாவை பாரத மாதா என்று ஒரு தாய்க்கு நிகராக நாம் கூறுகிறோம். அந்த பாரத மாதாவின் குரலாக இருந்தவர்தான் லதா மங்கேஷ்கர். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் எனும் “இசைக் குயில்” செம் மொழியான தமிழ் மொழியிலும் பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் என்ற பெயரை உச்சரித்ததுமே தமிழ் திரை இசை இரசிகர்களின் மனதில் வளையோசை கல கல கலவென என்கிற இளையராஜாவின் கீதம் ஒலிக்கத் துவங்கிவிடும். காதலர்களின் தேசிய கீதமாக அறியப்படும் இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1988. ”வளையோசை கலகல” பாடலுக்கு முன்பு தமிழ் இரசிகர்கள் கொண்டாடிய லதா மங்கேஷ்கர் பாடல் எதுவென்றால் ”ஆராரோ ஓ ஆரோரோ” என்கிற பாடல்தான். பிரபு நடித்த ஆனந்த் என்கிற இந்தப்படத்துக்கும் இசையமைத்தது இசைஞானிதான்.
லதா மங்கேஷ்கர் ”ஆராரோ” பாடலைப்பாட மிக முக்கியமான காரணம் யார் தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன். லதா மங்கேஷ்கர் நடிகர் திலகத்தை தன் உடன் பிறவா அண்ணனாக நினைத்து அன்புகாட்டியவர். அவர் மேல் உள்ள பாசம் காரணமாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஆனந்த் படத்தில் பாட உடனே ஒப்புக் கொண்டார்.
மும்பையில் பாவமன்னிப்பு படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் உடனே மெட்ராஸ் வந்துவிட்டார். நேரே சிவாஜியின் வீட்டுக்குச் சென்று தனது சகோதரி மற்றும் குடும்பத்தாருடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். அதுதான் சிவாஜியுடன் அவரது முதல் சந்திப்பு.
நடிகர் திலகம் பார்ப்பதற்கு லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கர் போலவே இருந்தாராம். அதனால் தன் தந்தையை நினைவுபடுத்திய நடிகர்திலகத்தை தனது ராக்கி சகோதரனாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தினார் அவர். லதா மங்கேஷ்கர் குடும்பமும், நடிகர் திலகம் குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே குடும்பமாக மாறிப்போனார்கள். நடிகர் திலகம் மறைந்த பின் அவர் நினைவாக, அவர் பெயரிலேயே ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் லதா. மும்பையில் இன்னமும் அந்த ஆம்புலன்ஸ் சேவை தொடர்கிறது.
1942 ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் தன்னுடைய முதல் திரை இசைப்பாடலைப் பாடினார். அது “கிதி ஹசால்” என்ற மராத்திப் பாடல். தமிழ் சினிமாபை் பொறுத்தவரை 1952ல் ஆண் (முரட்டு அடியாள்) என்ற ஹிந்தி டப்பிங் படத்தில் 4 பாடல்களைப் பாடியிருந்தார். தமிழ் சினிமாவில் அவரது குரல் அப்போதுதான் முதன் முதலாக ஒலித்தது.
1955-ம் ஆண்டு ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பான ”வான ரதம்” வெளியானது. அதில் நௌஷத் இசையில் ”எந்தன் கண்ணாளன்” என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால் இவை எல்லாமே ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பாடல்கள். எனவே அவர் பாடிய முதல் நேரடி தமிழ் பாடல் என்றால் இசைஞானியின் ஆராரோ பாடல்தான்!
என் புள்ளை பிரபுவுக்காக பாடுகிறேன் என்று பணம் எதுவும் வாங்காமல் அவர் பாடிக்கொடுத்த பாடல்தான் ஆராரோ பாடல். அவர் பாடிய ஆனந்த் , சத்யா, என் ஜீவன் பாடுது, கண்ணுக்கொரு வண்ணக்கிளி உள்ளிட்ட படங்கள் அனைத்துக்கும் இசை இளையராஜா. தமிழில் வேறு எவர் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியதில்லை.
1942ல் பாடத் துவங்கிய இசைக் குயில் 1998ல் இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுடன் தில் சே என்ற இந்திப் படத்துக்காக கை கோர்த்தார். நெஞ்சினிலே நெஞ்சினிலே என்று இசையரசி ஜானகி பாடிய பாடலை இந்தியில் ஜியா ஜிலே என்று லதா மங்கேஷ்கர் பாடினார்.
ரங்தே பசந்தி படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஏ.ஆர்.இரகுமான் பாடியுள்ள லுக்கா சுப்பி என்கிற பாடலைக் கேட்டால் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் கசியும். ஏ.ஆர்.இரகுமானுக்கும் அவருக்குமான உறவு தாய்க்கும், மகனுக்கும் உள்ள உறவு போன்றது.
என் தந்தையின் அறையில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் இருந்தது. கண்விழிக்கும்போதே லதா மங்கேஷ்கர் முகத்தைப் பார்த்துவிட்டுதான் அந்த நாளை துவக்குவார் என் அப்பா, என்று தன் தந்தை சேகர் பற்றி நினைவு கூர்கிறார் ரகுமான். அதை பார்த்துப் பார்த்து நான் சிறுவனான இருந்தபோதே எனக்குள்ளும் லதாஜியின் இசை நிரம்பிவிட்டது என ரகுமான் ஒரு முறை குறிப்பிட்டார்.
ரகுமான் தன்னுடைய இரங்கல் செய்தியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். நான் லதாஜியை சந்திக்கும் வரை, பாடுவதற்காக அதிகம் மெனக்கெட்டதில்லை. மேடை ஏறியதும் பாடி விடுவேன். அவ்வளவுதான். ஆனால் லதாஜியுடன் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மாறிவிட்டேன். தான் பாட வேண்டிய பாடல்களை லதாஜி மேடை ஏறும்வரை பயிற்சி செய்து கொண்டே இருந்தார். பல்லாயிரக் கணக்கான பாடல்கள் பாடிய பின்னும், பயிற்சிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.
அவர் பாடத் துவங்கிய காலத்தில், நௌஷத் அவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் 10 நாட்கள் தொடர்ந்து பயிற்சி கொடுப்பாராம். அதை இன்றும் கடைப்பிடிக்கிறார் லதாஜி. நானும் இப்போது அதை கடைப்பிடிக்கிறேன். ஒவ்வொரு கச்சேரிக்கு முன்பும் தம்பூரா வைத்து பயிற்சி செய்கிறேன் என்றார் ரகுமான்.