Log in


Rate this item
(0 votes)
ஐஸ்வர்யா - தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது.
 
திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். அது இயல்புதான்.
 
ஆனால் அந்தப் பிரபலங்களுக்கு நேரடியாக தொடர்பே இல்லாதவர்களை வைத்துக் கொண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்வு பற்றி அவர்கள் அவிழ்த்துவிடும் பொய்களையும், பிதற்றல்களையும் வெளியிடுவது எந்தவிதத்திலும் கண்ணியமானது அல்ல.
 
இந்த உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பானது குடும்பம்தான். மிகப் பெரிய அரசியாக இருந்தாலும், சேவகியாக இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அவர்களின் குடும்பம்தான். அங்குதான் அவர்கள் எல்லையற்ற சுதந்திரத்தை உணர்வார்கள். அது உடைபடும்போது ஏற்படும் வலிகளையும், காயங்களையும் விவரிக்க இயலாது. பெற்றோர்களை பிள்ளைகள் பிரிவதும், மனைவியை கணவன் பிரிவதும் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் சரிவது போலத்தான். பாதுகாப்பான ஒரு கோட்டை உடைவது போலத்தான். அதிலிருந்து மீள்வதும், அதே பாதுகாப்பை கட்டி எழுப்புவதும் அல்லது முற்றிலும் வேறொரு பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அது அவர்களின் வாழ்க்கை.
 
அவர்கள் திரைப்பிரபலங்கள் என்பதால் அவர்களின் வாழ்க்கையை நாம் அதிகமாகவே வேடிக்கை பார்க்கிறோம். ஊடகங்கள் அவர்களைப் பற்றி நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு காரணத்தால் மட்டுமே ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடலாம் என நினைப்பது பொறுப்பற்றத்தனம்.
 
பயில்வான் ரங்கநாதன் என்பரை வைத்துக் கொண்டு ஐஸ்வர்யா - தனுஷ் மணமுறிவு விவகாரம் பற்றி மாலைமுரசு தயாரித்து வெளியிட்டுள்ள நிகழ்ச்சி பொறுப்பற்றதனத்தின் உச்சம். மிகவும் கீழ்த்தரமான நிகழ்ச்சி. பயில்வான் ரங்கநாதனுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதிக்கே கூட இன்னொருவரின் அந்தரங்கத்தைப் பற்றி பொதுவெளியில் பேச உரிமையில்லை.
 
மாலைமுரசுவின் எடிட்டருக்கு வன்மையான கண்டனங்கள். தயவு செய்து பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
 
உங்கள் நிகழ்ச்சியின் வாயிலாக ஒரே ஒரு பூச் செடி காப்பாற்றப்பட்டாலோ, ஒரே ஒரு சொட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டாலோ, ஒரே ஒரு மனிதன் உயிர் பிழைத்தாலோ, ஒரே ஒரு குடும்பம் ஒன்று சேர்ந்தாலோ அதுதான் வெற்றி. நீங்கள் இந்த நிகழ்ச்சியின் வழியாக என்ன சாதித்தீர்கள் என்று உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
 
ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்
Rate this item
(0 votes)


என் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அதில் அவர் நடிக்கும் நாடகம், சினிமா, சூட்டிங் மற்றும் அன்றன்று நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதியிருப்பார். ஏதோ ஒரு பக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பற்றி எழுதியிருந்தார். ஓ மஞ்சு படப்பிடிப்பாக இருக்கலாம். செட்டில் கவனிக்க முடியாத தூரத்தில் இருக்கும் துணை நடிகர்களைக் கூட ஸ்ரீதர் கவனித்தார். அவர்களின் ஆக்ஷன், ரியாக்ஷன்களை சரி செய்தார் என்று வியப்பாக எழுதியிருந்தார்.

ஓ மஞ்சு படத்தில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள போஸ்ட் மாஸ்டராக நடித்திருந்தார். தந்தி கொடுக்க வரும் தேங்காய் ஸ்ரீனிவாசனின் டைமிங், பாடி லாங்குவேஜ் மற்றும் ஏறி இறங்கும் உச்சரிப்பு அட்டகாசம். அவருடைய அத்தனை சேட்டைகளுக்கும் சிரிக்காமல் ரியாக்ஷன் கொடுத்திருப்பார். பிறகு தன் முறை வரும்போது அப்பாவியாக முகத்துடன் அவர் பேசுகிற வசனங்களும் அதற்கு தேங்காயின் ரியாக்ஷன்களும் அமர்க்களம். குறிப்பாக தேங்காய் தந்தியை தமிழில் சொல்லச் சொல்ல, அதற்கு என் அப்பா ஐ.ஸ்.ஆரின் இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன்... சூப்பர்!

இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் நினைவு தினம். பல புதுமைகளை தமிழ்சினிமாவிற்கு அளித்த ஸ்ரீதரின் இயக்கத்தில் எங்கள் அப்பா ஐ.எஸ்.ஆரும் நடித்தார் என்பதில் எங்களுக்குகெல்லாம் பெருமையே.

Rate this item
(0 votes)
சென்னையில ஒரு வாரத்துக்கு முன்னாடியே மார்கழிக்கு லீவு கொடுத்துட்டாங்க போலருக்கு. அது எங்கேயோ மலையேறிடுச்சு. அதனால் இன்று அதிகாலை போகி சம்பிரதாயங்களின் போது குளிர் இல்லை, குப்பையும் குறைவாகத்தான் இருந்தது. அதனால் வருடா வருடம் எடுக்கும் போகி போட்டோவே இந்த முறை மறந்துவிட்டது.
 
ஏழு தீக்குச்சிகள் சீறி அணைந்தபின்னும் திடீர் மழையில் நனைந்த பாயும், பழைய அட்டைப்பெட்டிகளும், காலண்டர்களும், எரிவதற்கு அடம்பிடித்தன. கசிந்த புகைக்கு நடுவில் நான் சலித்துக் கொண்டபோது ஒரு பட்டுப்புடவை பெண்மணி வேகமாக கடந்து சென்றார். காமிரா இருந்திருந்தால் ஒரு குறும்படத்தின் முதல் காட்சியை நேச்சுரல் போகி லைட்டிங்கில் எடுத்திருக்கலாம்.
ஒரு வழியாக போகி நன்றாக எரிந்த போது, அதன் வெம்மை முட்டிவலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அதனால் நான் நகராமல் நின்றிருந்தேன். அந்தப் பெண்மணி திரும்ப வந்து கொண்டிருந்தார். இந்த ஆள் பார்ப்பதற்கு முன் கடந்துவிட வேண்டும் என்கிற வேகம் அவருடைய நடையில் இருந்தது. இந்தக் காட்சியை அவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் எப்படி எழுதியிருப்பார் என்கிற ஆவலுடன் ஹேப்பி போகி!
சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான காலை வணக்கம்!
Rate this item
(0 votes)
வாருங்கள் படிப்போம் என்கிற வாட்சப் (இன்னான்ற) குழுவில் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இலக்கிய ஆர்வலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மானே, தேனே என கோடிட்ட இடங்களை நிரப்புவது எனக்கு எளிது. ஆனால் திடீரென்று மீண்டும் கவிதை, கிவிதை எழுதிவிடுவேனோ என பயமாக இருக்கிறது.
எதற்கும் ரிவர்ஸ் மெட்டஃபர் அது இது என்று ஆங்கில பிரயோகங்களை தயாராக வைத்துக்கொள்கிறேன். என்னய்யா எழுதியிருக்க என்று கேட்டால் தப்பிக்க உதவும்.
குழுவில் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பலர் உற்சாகமாக பங்கேற்கிறார்கள். சீனியர்களும், விருந்தினர்களும் அவர்களை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரு வருடங்களுக்குள் இந்தக் குழு தனித்துவம் பெற்றதாக மாறிவிடும். நம்பிக்கை தரும் புதிய எழுத்தாளர்கள் வெளிப்படுவார்கள்.
 
ISR செல்வகுமார்
Rate this item
(0 votes)

பாமா விஜயம் படத்தில் எங்கள் அப்பாவுக்கு ஐ.எஸ்.ஆருக்கு நல்ல பெயர் கிடைக்க காரணம் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான். படம் வெளியானபோது திருடனாக நடித்த காட்சிக்கு எக்கச்சக்க வரவேற்பு. கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளும் என் அப்பா ஐ.எஸ்.ஆரை பாராட்டி விமர்சனம் எழுதின. இத்தனைக்கும் அவர் நடித்தது ஒரே ஒரு காட்சிதான். இன்று கூட என் அப்பா நடிப்பில் சிலருக்கு உடனே ஞாபகம் வரும் காட்சி, பாமா விஜயம் காட்சிதான்.

பாமா விஜயம் படத்தின் இயக்குநர் கே.பாலச்சந்தர். அப்போதெல்லாம் எங்கள் அப்பா பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் இருப்பார். சௌகார், ஸ்ரீகாந்த், ஜெயந்தி, நாகேஷ் வரிசையில் என் அப்பாவும் பாலச்சந்தர் ரெகுலர்களில் ஒருவர். ராகினி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் மேடை நாடகம் போட்டதிலிருந்தே கே.பி க்கு என் அப்பா பழக்கம். அவருடைய அனைத்து நாடகங்களிலும் என் அப்பா நடித்திருக்கிறார். அதனால் பாமா விஜயம் படத்திலும் இருந்தார். ஆனால் ஒரே ஒரு காட்சிதான்.

பாமா விஜயம் படத்தின் விநியோக உரிமை ஜெமினி ஸ்டுடியோ திரு. எஸ்.எஸ்.வாசன். அதனால் படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய அவர் ஐ.எஸ்.ஆருக்கு கூடுதலாக குளோசப் காட்சிகள் வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட காட்சியில் பல இடங்களில் என் அப்பாவுக்கு மட்டும் குளோசப் இணைக்கப்பட்டது. படம் வெளியானபின் வாசனின் கணிப்பு வென்றது. என் அப்பாவிற்கு நிறைய நல்ல பேரும், புது இரசிகர்களும் கிடைத்தார்கள். அதற்கு அந்த குளோசப் காட்சிகள் உதவியதாக என் அப்பா அடிக்கடி எஸ்.எஸ்.வாசன் பற்றி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார். அதே படம் ஹிந்தியில் தயாரானபோது எஸ்.எஸ்.வாசனும், எஸ்.எஸ். பாலனும் இணைந்து இயக்கினார்கள். படத்தின் பெயர் ”தீன் பஹுரானியன்”.

ISR செல்வகுமார்

#ActorISR #HBDisr #BamaVijayam #ThiefScene #KBalachandar #SSVasan #Closeup #GeminiStudios

Rate this item
(0 votes)

ஒரு மாணவன் சரியா பரிட்சை எழுதலன்னா, அடுத்த தடவை இன்னும் நல்லா படிச்சு எழுதுன்னு சொல்லலாம். அதை விட்டு உனக்கெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடம் என்று திட்டினால் அந்த மாணவன் என்ன ஆவான். அவன் ஆரம்பிக்கும்போதே தோற்கடிக்கப்படுவான் அதுதான் ஒரு இயக்குநருக்கு நடக்கிறது. படம்பிடிக்கவில்லை என்றால் சுட்டிக்காட்டலாம், அடுத்த படம் நன்றாக எடுங்கள் என்று சொல்லலாம். ஆனால் உனக்கெல்லாம் எதற்கு சினிமா என்பது போல கடுமையாக விமர்சனம் செய்யாதீர்கள்.

அவன் எவ்வளவு கனவுடன் அந்தப்படத்தை இயக்கியிருப்பான். அவனை நம்பி எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள், இணை/துணை இயக்குநர்கள் என்று எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் இந்தப்படம் வெற்றி அடையும். இதை வைத்து அடுத்து ஒரு படம் செய்யலாம் என கனவுடன் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் தகர்ந்து போகிற அளவுக்கு ஏன் விமர்சனம் செய்கிறீர்கள். இயக்குநர்களின் குடும்பத்தைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா! வறுமை, கடன் என எத்தனையோ இடர்களைத் தாண்டி அந்த இயக்குநர்களின் குடும்பம் எவ்வளவு ஆசையுடனும், கனவுடனும் இருப்பார்கள்!!! என் அப்பாவின் படம், என் சகோதரனின் படம், என் கணவனின் படம் என்று எவ்வளவு பரவசத்துடன் உறவினர்களையும், நண்பர்களையும் படம் பார்க்க அழைத்திருப்பார்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள்.

உங்கள் கடுமையான விமர்சனங்கள் அவர்களின் குடும்பத்தினரை எந்த அளவுக்கு காயப்படுத்தும், வேதனைப்படுத்தும், நோகடிக்கும் என்பதையும் யோசித்துப்பாருங்கள். ”விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கலாமே”, என்று விஜய் ஆன்டனி ஒரு வெப் டிவிக்கு பேட்டியளித்திருந்தார். நான் அதைப் பார்த்துவிட்டு என் ஞாபகத்திலிருந்து எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய வார்த்தைகள் மாறியிருக்கலாம். ஆனால் அவர் சொல்லிய கருத்து இதுதான். அவர் சொல்லிய விதமும், சொல்லிய கருத்தும் என் மனதில் அமர்ந்துவிட்டது. இயக்குநர் சேரன் கூட டிவிட்டரில் இது பற்றி பகிர்ந்திருந்தார்.

பிளாக் எழுதத் துவங்கிய பின் எல்லையில்லா எழுத்து சுதந்திரம் கிடைத்தது போல உணர்ந்தேன். அது தந்த மமதையில் என்னிடமும் இந்த கெட்ட குணம் இருந்தது. பட விமர்சனத்தையும் தாண்டி படமெடுத்தவர்களையும் விமர்சித்திருக்கிறேன். அப்போது பெயர் அறிவிக்காத நபர் (Anonymous) ஒருவர் ஒரு கமெண்டில் ”ஏன்யா இப்படி அவங்கள வறுக்கற..” என்று ஆரம்பித்து மிக நாசூக்காக எனது போக்கில் இருந்த தவறை சுட்டிக் காட்டினார். நல்லவேளையாக அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். உடனே அந்த வலைப்பதிவையும், அதற்கு முன் எழுதிய பல பதிவுகளையும் நீக்கிவிட்டேன். அந்த Anonymous நண்பருக்கு நன்றி. அரசியல் பற்றிய பதிவுகளிலும் கேலி என்ற பெயரில் எல்லை தாண்டுகிறோம் எனத் தோன்றிவிட்டது. பின்னர் அவற்றையும் குறைத்து பின்னர் முற்றிலும் தவிர்த்துவிட்டேன். இந்த இடத்தில் எனது மீறலை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி!

திரைப்பிரலங்கள் எப்போதுமே நமக்கு ஒரு Soft Targetதான். வயதில் மூத்த பாடகர்கள், இயக்குநர்கள் நடிகர்களைக் கூட நாம் சர்வசாதாரணமாக அவன் இவன், அவள் இவள் என்றுதான் பேசுகிறோம். அரசியல் பிரபலங்களையும் அவ்வாறே குறிப்பிடுகிறோம். அவர்களை மதிப்புடன் குறிப்பிடுவது நமக்கும் மதிப்பு கூட்டும் ஒரு செயல். ஆனால் இந்த நாகரீகம் ஏனோ நமக்குப் புரிவதே இல்லை. அவர்களின் புகழுக்கும், செல்வத்துக்கும் நாம்தான் என்கிற ஆழ்மன செருக்கு நம் எல்லோரிடமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அதுதான் நிதர்சனம் என்று சிலர் வாதிடுகிறார்கள். அப்படியானால் நாம் நிராகரித்த எத்தனையோ திறமைசாலிகள் திரை உலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய வாய்ப்பு இன்மைக்கும், வறுமைக்கும், அல்லலுக்கும் நாம்தான் காரணம் என்று சொல்லலாமா? இதை நாம் ஒப்புக் கொள்வோமா?

திரையுலகினரின் வெற்றிக்கு நாம்தான் காரணம் என்றால் தோல்விக்கும் நாம்தான் காரணமா? இது போல பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போகலாம். அது நாம் வாழும் சமூகம் பற்றிய உளவியல் ரீதியான ஒரு கட்டுரையாக நீண்டுகொண்டே போகும். ஆனால் அதைப்பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும். அதற்கு இது ஒரு துவக்கமாக இருக்கட்டும். விஜய் ஆன்டனி மிகச் சரியாக உளவியல் ரீதியான கேள்விகளை எழுப்பி துவக்கி வைத்திருக்கிறார். அவர் வார்த்தைகளில் இருந்த உண்மையும், வலியும், தெளிவும் என்னை சிந்திக்கத் தூண்டியது என்னைப் போலவே மற்றவர்களும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இதை வாசிக்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில் நம்பிக்கை தரும் மனிதர்களும், வார்த்தைகளும், செயல்களும்தான் சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையாக இருக்கிறது. எனவே நம்பிக்கை தரும் சூழலை உருவாக்குவோம். அதற்காக மீண்டும் ஒரு முறை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். திரை விமர்சனம் என்ற பெயரில் நாம் செய்வது சரியா?

ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

#VijayAntony #FilmReview #ISRselvakumar #ISRventures

Rate this item
(0 votes)

ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்துள்ள கலாட்டா கல்யாணம் (#AtrangiRe) படத்தில் ரோஹிணி ஒரு பாடல் எழுதியுள்ளார். பலரும் கவனிக்க மறந்துவிட்டோம். அவரைப் போன்ற சில பெண் பாடலாசிரியர்களை #CinemaTicket இணையதளம் பட்டியலிட்டுள்ளது. எனக்குப் பிடித்த தமயந்தியும், ரோஹிணியும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். வேறு யாராவது இந்தப் பட்டியலில் சேர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா? ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Rate this item
(0 votes)

சித் ஸ்ரீராம் ஏன் விமர்சிக்கப்படுகிறார்? இதற்கான பதில் ஏன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு உருகுகிறோம் என்பதில் இருக்கிறது. சில திரை இசைப் பாடல்களுக்கு, சினிமாவையும் தாண்டி நிலைத்து நிற்கும் Cult Status வந்துவிடும். உள்ளத்தில் நல்ல உள்ளம் அப்படி ஒரு பாடல். பாடலை பாடுபவர், இசைப்பவர், இரசிப்பவர் என அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெகிழ வைக்கும் தன்மை இந்தப் பாடலுக்கு உண்டு. சித்ஸ்ரீராமும் அப்படி நெகிழ்ந்து போன ஒரு இரசிகர்களில் ஒருவர்தான். என்னைப் போன்ற சாதாரண இரசிகன், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அது தரும் உணர்வுகளால் நெகிழ்கிறோம். சித்ஸ்ரீராம் ஒரு பாடகராகவும் இருப்பதால் ஒவ்வொரு முறையும் அதன் இசை நுணுக்கங்களையும் சேர்த்து இரசிப்பவராக இருக்கிறார். நீங்களோ நானோ அந்தப் பாடலை என் நண்பனுக்கோ, மகளுக்கோ பரிந்துரைக்கிறோம், திரும்பக் கேட்கிறோம். சித்ஸ்ரீராம் அந்தப்பாடல் வழியாக தனது கர்நாடக இசை அறிவை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார். இதுதான் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் இரசிகராக நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் இங்குதான் சிக்கல் வருகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற திரை இசை மேதைகள் கிளாசிகல் இசையை கையாண்ட விதத்திற்காக சில நேரம் கர்நாடக இசை இரசிகர்களால் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ராகத்தை கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் கொண்டாடும் கர்ணன் படப்பாடல்கள் வெளிவந்தபோது மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணையின் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். சிந்து பைரவிக்காக அதே போல இளையராஜாவை சாடியதையும் தேடி வாசியுங்கள். ராகங்களை கெடுத்துவிட்டார்கள் என்பது அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. தற்போது சித்ஸ்ரீராம் இதே போல சினிமா பாடல் இரசிகர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் அவ்வப்போது தனக்குப் பிடித்த பிரபல ஹிட் பாடல்களை தனது பாணியில் மேடைகளில் இம்ப்ரவைஸ் செய்கிறார். அது பல சினிமா பாடல் இரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரசனை மோதலின் உச்சகட்டம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காதல், கோபம், பக்தி என ஏதோ ஒரு உணர்வை வெளிப்படுத்தும் கணங்களாகத்தான் திரைப்பாடல்கள் உள்ளன. அது காட்சி வடிவத்தோடு சேர்த்து இரசிக்கப்படுவதால் பார்க்கிற ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை அந்தப்பாடலுடன் இணைத்து இரசிக்கிறார்கள். அதனால் சில பாடல்கள் உணர்வுப்பூர்வமான கல்வெட்டுகளாக மனதில் பதிந்துவிடுகின்றன. கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் சிச்சுவேஷன் மிக மிக அபூர்வம். நான் நல்லதே நினைத்தேன், நல்லதே செய்தேன் ஆனாலும் எனக்கு ஏன் இந்த சோதனை, நான் ஏன் வஞ்சிக்கப்பட்டேன் என ஒவ்வொரு மனதிலும் ஒரு வேதனை இருக்கும். இந்தப் பாடல் அதனை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியது. மகாபாரதக் கதை, அது ஏற்படுத்தியிருக்கும் வீச்சு, உயிரை உருக்கி நடிக்கும் சிவாஜி, என்.டி.ஆர் போன்ற மகோன்னதக் கலைஞர்கள், கண்ணதாசன் என்கிற காவியக் கலைஞன், திரை இசை வழியாக மனித உணர்வுகளை மீட்டிய மெல்லிசை மன்னர்கள் என மீண்டும் அமையவே முடியாத உணர்வு மயமான கற்பனைக் கடல்களின் சங்கமம் அந்தப்பாடல். 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் இன்றும் அந்தப்பாடல் பற்றிய அறிவிப்பு வரும்போதே அரங்கத்தில் கண்ணீர் துளிகளை பெருக வைக்கும் அதிர்வுகளை உள்ளடக்கியது அப்பாடல். தமிழ் நெஞ்சங்களில் இரகசியமாக உள்ளத்தை கசிய வைத்துக்கொண்டே இருக்கும் படைப்பு அது. அந்தப்பாடலை அப்படியே கையாள்வதே மிகவும் ரிஸ்க். ஆனால் அந்தப்பாடல் தரும் உணர்வுகளை எல்லாம் கழித்துவிட்டு, அதன் ராகத்தை மட்டும் விஸ்தரித்துப் பாடியதுதான் சித்ஸ்ரீராம் செய்த தவறு. பாடலின் ஆன்மாவை நீக்கிவிட்டு, ராகத்தை மட்டும் அலங்கரித்துப் பாடினால் அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு இசைஞானியின் அற்புதமான எளிமையான பாடல். இது தரும் சுகானுபவத்தை யுவன் போன்ற தற்கால இசை அமைப்பாளர்கள் கையாண்டால் எப்படி இருக்கும் என்பதை இளையராஜாவே மேடையில் பாடிக்காட்டினார். பாடலின் ஆன்மாவை உதறிவிட்டு ஒரு வார்தையைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சர்க்கஸ் வேலைகள்தான் எப்போதுமே இரசிக்கப்பட்டதில்லை. சித்ஸ்ரீராம் செய்ததும் தனது கிளாசிகல் அறிவை வெளிப்படுத்திய இசை சர்க்கஸ்தான். இதே பாடலை அவர் இந்த ஸ்வர சேட்டைகள் இல்லாமல் வேறு மேடையிலும் பாடியிருக்கிறார். யுடியூபில் தேடிப்பாருங்கள் அது நன்றாகத்தான் இருக்கின்றது. சஞ்சய் சுப்பிரமணியமும் சில நூறு எபிசோடுகளை செய்துவிட்டார். ஹிட்பாடல்களில் (பெரும்பாலும் இளையராஜா) பதித்து வைத்திருக்கும் கர்நாடக இசை நுணுக்கங்களை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சட்டென்று தொட்டுக் காட்டிவிடுகிறார். அது இரசிக்கப்படுகிறது. ஏனென்றால் அது காலத்துக்கு ஏற்ற துணுக்கு வகை. ஓ இந்த ராகத்தில் அந்தப்பாடலா என நாம் புருவம் உயர்த்தும்போது முடித்துவிடுகிறார். எப்போதுமே இருவேறு இசைக்கலப்புகளை கலந்து உருவாக்கும் பியூஷன் வகை இசைக்கு வரவேற்பை விட விமர்சனங்கள்தான் அதிகம். எம்.எஸ்.வி, இளையராஜா போன்றோர் கிளாசிகல் இசையை கெடுத்துவிட்டதாக எப்படி விமர்சிக்கப்பட்டார்களோ, அதே போல சித்ஸ்ரீராம் தற்போது சினிமா பாடலை கெடுத்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆன்லைன் சுதந்திரங்களால் அவருடைய உருவமும் கேலிக்குள்ளாகிறது. இது நெருடலானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவருடைய இசையை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் இரசனைகளைப் பொறுத்தது, ஆனால் உருவ கேலிகளும், அவருடைய இசை அறிவையே கேலிக்குள்ளாக்குவதும் ஏற்கத்தக்கதல்ல. ஓரிரு வருடங்களுக்கு முன் பரத்வாஜ் ரங்கன் சித்ஸ்ரீராமை ஒரு பேட்டி எடுத்திருந்தார். சித்ஸ்ரீராமுக்கு எம்.எஸ்.வி பற்றியும் அவரது பாடல்கள் பற்றியும் எதுவுமே தெரிந்திருக்கவில்லை, என்பதை அந்தப் பேட்டி உணர்த்தியது. அதற்குப் பின் ஒரு வீடியோவில் தனது சகோதரியுடன் இணைந்து இதே உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ரிகர்சலில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்தேன். அதனால் 2Kவிற்கு முந்தைய திரைஇசையில் தனக்குப் பிடித்ததை அவர் இரசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதும், அதை தனது பாணியில் தனது இசை அறிவுடன் இணைத்து கொடுக்க முயற்சித்திருக்கிறார் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த முயற்சி கடுமையான விமர்சனங்களைக் கொடுத்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து அவரது ரியாக்ஷன் என்ன என்பது தெரியவில்லை. அவர் பதில் சொல்ல வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் நாம் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாகவே இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் நமது இரசனை மேன்மை, இரசனைக் குறைவு என எல்லாமே வெளிப்பட்டிருக்கிறது. இந்தப்பதிவு இந்தப்பிரச்சனை குறித்து என்னுடைய புரிதல் மட்டுமே. கர்நாடக இசையா? திரை இசையா? ஃபியூஷனா எது மேன்மையானது என்பது பற்றிய கட்டுரை அல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஆன்மாவை வருடும் எதுவும் நல்ல இசையே. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா... சீர்காழியின் தெய்வீகக் குரலில் மீண்டும் ஒரு முறை இந்தப்பாடலில் கரைந்து கொள்கிறேன். - ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

Rate this item
(0 votes)

Rohini! Great actor, director, dancer, thinker and social activist. I'm happy to say that I've directed a Talk show anchored by her. The pre and post discussion of the was full of thought provoking. Today is her birthday. Have a great birthday Rohini. Want to work with you again.

Rate this item
(0 votes)

மனம் திரும்புதே என்ற நிகழ்ச்சிக்காக இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தபோது நிகழ்ந்தவை. இயக்குநர் ரஞ்சித். சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களை இயக்கியவர்(அட்டகத்தி, மெட்ராஸ்). அவரிடம் சினிமா உலகிற்கான எந்தப்பூச்சும் இல்லை. ”இன்னா சார் பேசணும்”, பேச்சில் அவ்வப்போது மெட்ராஸ் தமிழ். ”பொதுவா நான் டிவின்னாலே அவாய்ட் பண்ணிடுவேன் சார். இயல்பாவே பேச முடியல. நடிக்க வேண்டியதிருக்கு”, என்றார். நீங்கள் தயங்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சி முழுவதும் நீங்கள் நீங்களாகவே இருப்பீங்க. இது வெறும் நிகழ்ச்சி அல்ல. அனுபவம்”, என்று இளக வைக்க முயற்சித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து படப்பிடிப்பு முடிந்ததும் ”ரொம்ப தேங்ஸ். பயந்துகிட்டே வந்தேன். ஆனா சூப்பரா பண்ட்டீங்க” என்றார். அதைச் சொல்லும்போது அவரும் அவருடைய தோளில் இருந்த குழந்தையும் ஜெம்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் காதலித்து மணந்த மனைவி அதனை இரசித்துக்கொண்டிருந்தார். உடனிருந்த நண்பர்களும், சகோதரர்களும், பெற்றோர்களும் அப்போதுதான் முதல்முறையாக பார்ப்பது போல மலர்ச்சியாக இன்னமும் பேசிக்கொண்டே இருந்தார்கள். குழந்தை தன் மழலைக்குரலில் டாட்டா என்றது. டாட்டா சொல்லும்போது கைகளில் ஒட்டியிருந்த ஜெம்ஸ் மிட்டாய்போல இனிய நினைவுகளை சுமந்து கொண்டு விடைபெற்றார் ரஞ்சித். வாழ்க ரஞ்சித்தும் அவர் குடும்பத்தினரும். மனம் திரும்புதே (6/12/2014) #manamthirumbuthey #puthuyugamtv ரஞ்சித்தின் பிறந்தநாளில் இந்நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி!

Page 3 of 22

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31