Log in


யாதுமானவள்!

மழை கொட்டிக் கொண்டிருக்கும் இந்த ஈரமான மாலையில் யாதுமானவள் நினைவுக்கு வந்துவிட்டாள்.

சினிமாக் கனவை நோக்கி நான் எடுத்து வைத்த முதல் அடிதான் ”யாதுமானவள்”, குறும்படம்.

ஏதோ ஒரு அதிகாலையில் சுஜாதாவின் கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த நிஜ சம்பவம், எனக்குள் ஸ்கிரிப்டாக உருவானது. அதனை படமாக்க முடிவு செய்தேன். அப்போதுதான் காலம் விந்தையானது என்பதை உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. எதிர்பாராத இனிய ஆச்சரியமாக அந்த ஸ்கிரிப்டுக்கு நிஜத்திலேயே தொடர்புள்ள திரு. சுகுமார் அவர்களை சந்தித்தேன். அவரை சந்தித்ததும், அதன் பின் நடந்தவைகளும், எவராலும் யூகிக்க முடியாத நினைவுகளாக மாறிவிட்டது. அதனை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

2011 டிஜிட்டல் திரைப்படங்கள் பிரபலமாகாத வருடம். என் சித்தப்பா சோலை ஆதரவுடன் Canon 7D காமிராவை வாங்கினோம். ஆனால் ஒளிப்பதிவாளர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. Canon 7D-யில் ஃபோட்டோ எடுக்கலாம், வீடியோ எடுக்க முடியாது என்று ஒதுங்கினார்கள்.

வேறு வழியின்றி நானே யுடியூப் உதவியுடன் அதனை பயன்படுத்தக் கற்றுக் கொண்டேன். வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு காட்சியையும் படம்பிடித்து, எடிட் செய்து பார்த்தேன். நம்பிக்கை வந்ததும் தைரியமாக படப்பிடிப்பில் இறங்கினேன். யாதுமானவள் உருவானாள். சகோதரர், இயக்குநர் நவீன் உதவியுடன், தேசிய விருதுக்கு அனுப்பி வைத்த அனுபவமும் கிடைத்தது.

யாதுமானவளுக்கும், பெரு மழைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றைய திடீர் இடி மழை எனக்கு யாதுமானவளை ரி ரிலீஸ் செய்யத் தூண்டியது. உடனே ஒரு போஸ்டரை தயார் செய்து அறிவித்துவிட்டேன்.

விரைவில் ரீ ரிலீஸ் தேதியை அறிவிக்கிறேன்.

Published in ISR Selva speaking
சென்னையில ஒரு வாரத்துக்கு முன்னாடியே மார்கழிக்கு லீவு கொடுத்துட்டாங்க போலருக்கு. அது எங்கேயோ மலையேறிடுச்சு. அதனால் இன்று அதிகாலை போகி சம்பிரதாயங்களின் போது குளிர் இல்லை, குப்பையும் குறைவாகத்தான் இருந்தது. அதனால் வருடா வருடம் எடுக்கும் போகி போட்டோவே இந்த முறை மறந்துவிட்டது.
 
ஏழு தீக்குச்சிகள் சீறி அணைந்தபின்னும் திடீர் மழையில் நனைந்த பாயும், பழைய அட்டைப்பெட்டிகளும், காலண்டர்களும், எரிவதற்கு அடம்பிடித்தன. கசிந்த புகைக்கு நடுவில் நான் சலித்துக் கொண்டபோது ஒரு பட்டுப்புடவை பெண்மணி வேகமாக கடந்து சென்றார். காமிரா இருந்திருந்தால் ஒரு குறும்படத்தின் முதல் காட்சியை நேச்சுரல் போகி லைட்டிங்கில் எடுத்திருக்கலாம்.
ஒரு வழியாக போகி நன்றாக எரிந்த போது, அதன் வெம்மை முட்டிவலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அதனால் நான் நகராமல் நின்றிருந்தேன். அந்தப் பெண்மணி திரும்ப வந்து கொண்டிருந்தார். இந்த ஆள் பார்ப்பதற்கு முன் கடந்துவிட வேண்டும் என்கிற வேகம் அவருடைய நடையில் இருந்தது. இந்தக் காட்சியை அவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் எப்படி எழுதியிருப்பார் என்கிற ஆவலுடன் ஹேப்பி போகி!
சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான காலை வணக்கம்!
Published in ISR Selva speaking

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31