”கொஞ்சம் வழுகலா கொடுங்க”
விசுக்கென்று தலை சீவிய இளநியை தந்துவிட்டு, ஒரு பேப்பர் ஸ்ட்ராவை செருக முயன்றார் இளநிக்காரர். திடீரென்று கொரானா ஞாபகம் வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஸ்ட்ராவை மறுத்துவிட்டு, நான் அப்படியே இளநியை உறிஞ்சினேன். அதற்குப்பின் அவர் இளநியைப் பிளந்து தேங்காயை எடுத்து தரும்போது, சீவிய அரிவாளில் கொரானோ இருந்திருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது. இப்போது தேங்காயை சாப்பிடலாமா? வேண்டாமா? என ஒரு ஊசலாட்டம். அந்த இளம் தேங்காய் சாப்பிடு என்றது. கொரோனா பயம் வேண்டாம் என்றது. யோசனையுடன் தடுமாறிக்கொண்டிந்தபோது, அந்தப் பெண்ணின் குரல் கேட்டது.
”எனக்கும் ஸ்டிரா வேண்டாம். அவருக்கு மாதிரியே நல்லா சீவி தந்திடுங்க. நானும் அப்படியே சாப்பிடுறேன்” என்ற பெண்ணின் குரல் அன்றைய ரேவதியை ஞாபகப்படுத்தியது. தோற்றம் இன்றைய த்ரிஷா. பளிச்சென்று கருநீலம் மின்னிய சுடிதாரில், காலையில் அவள் சில்லென்று என்னைப் பார்த்த பார்வை இப்போது வரை ஞாபகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர், எதிரில் வந்த வாகனம், டிராபிக் மற்றும் கொரோனா உட்பட எல்லாமே மறந்துவிட்டது.
பிரேக்கிங் நியூஸ் - கருநீல சுடிதார் பெண்களிடம் கொரோனா பயத்தை பளிச்சென்று மறக்கவைக்கும் வசீகரப் புன்னகை இருக்கிறது.
- ISR Selvakumar