நம்பிக்கையின் கீற்று!
அனாதையாகக்கிடந்த முதியவரின் உடலை, கொரோனாவுக்கு அஞ்சாமல் அடக்கம் செய்த திணைநிலவாசிகள்!
சிலநாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய எவருமே முன்வராத ஒரு அவலத்தை நாம் கண்டோம். களத்திலிருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கைதட்டுகிறோம், விளக்கேற்றுகிறோம் என்று போலித்தனமாக டி.விக்கு போஸ் கொடுத்துக் கொண்டாடியவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணர்ந்த சம்பவம் அது. இருக்கட்டும்! இது போன்ற போலித்தனமானவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். இதை அறிந்தவர்களில் சிலர் கோபப்பட்டார்கள், சிலர் கேலி செய்தார்கள், சிலர் அமைதியாகக் கடந்தார்கள்.
வெகு சிலர் நடந்தது தங்கள் இருப்பையே காட்டிக் கொள்ளாமல் சலனமற்று இருந்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலகமே கைவிட்டாலும், கடவுளே நிராகரித்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தாமே முன்வந்து உதவக் கூடியவர்கள். அவர்களில் சிலர்தான் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் என்கிற நாடகக் கலைஞர்கள். இன்று அவர்கள் செய்த நற்பணி அளப்பறியது.
சென்னை செங்குன்றம் பகுதியில் 73 வயதுதக்க முதியவர் பிளாட் பாரத்தில் அனாதையாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் திணைநிலவாசிகளை
தொடர்பு கொண்டார்கள். திணைநிலவாசிகள் துளியும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இன்று அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார்கள்.
கொரோனாவை விட நிராகரிப்பு கொடுமையானது. வறுமை, முதுமை, குடும்பத்தகராறு, மனப்பிறழ்வு என பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் நம் அனைவருக்கும் நம்பிக்கை தரும்விதமாக சில நல் உள்ளங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள்.
இந்த நாடும், வனமும், காடும், வானமும் இவர்களைப் போன்ற நல் உள்ளங்களால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியிருக்கும் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் நண்பர்களுக்கு நன்றி!
இரவு பதினோரு மணிக்கு செக்கில் ஆட்டிய எண்ணையைத் தேடி ஒரு மளிகைக் கடைக்குள் நுழைந்தபோது...
வாசலில் இருந்த பூண்டு மூட்டைகளை தூக்கி வைத்தபடியே அவன் கேட்டான்.
”என்ன அண்ணே இப்படி ஆயிருச்சு? எல்லாத்தையும் மூடச் சொல்லிட்டா எப்படிண்ணே பொழைக்கிறது?”
”டேய்ய்ய்ய்... ரொம்ப ஃபீல் பண்ணாத. உன் டாஸ்மாக்கை மூடச் சொல்லல. அது தெறந்துதான் இருக்கு.”, என்றார் பில் போட்டுக்கொண்டிருந்தவன்(ர்)
நான் எண்ணையை எடுத்துக் கொண்டு பில் போட வந்துவிட்டேன்.
அவன் அடுத்த பூண்டு மூட்டையை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே.. ”ஐயய்யோ நாளைக்கு கிடைக்காதுன்னு நெனச்சு எக்ஸ்ட்ராவா ரெண்டு குவார்ட்டரை வாங்கிட்டேனே.”, என்றான்.
எருமை, உன் வேட்டிக்குள்ள இருந்து பாட்டில் சத்தம் வந்தப்பவே நெனச்சேன். கஸ்டமர் இருக்கும்போது ஏண்டா இங்க வர்ற, உங்களுக்கு வேற என்ன சார்?
நான் பதில் சொல்லும் முன் இன்னொரு குரல் கேட்டது, அரை டிரவுசரில் தாடி வைத்த பாச்சுலர் பையன். அவன் எப்போது உள்ளே வந்தானோ...
”குமாரு (பெயரை மாற்றிவிட்டேன்), எனக்கு அவன் கிட்ட இருந்து ஒரு பாட்டிலை தேத்திக் குடு. வாங்க மறந்துட்டேன்”, என்றான்
வாசலிலிருந்தே, ”மேல பத்து ரூபா”, என்றான் பூண்டு மூட்டைக்காரன்.
உற்சாகமான இரவு வணக்கம் மக்காஸ்! குடி குடியைக் கெடுக்கும். கொரானாவை என்ன செய்யும் எனத் தெரியவில்லை. ஊரெல்லாம் டாஸ்மாக் கடை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறது.
பத்து வீடு தள்ளியிருக்கிற ஒரு மொட்டை மாடியில் துணி காயப் போடுகிற சாக்கில் ஒரு தம்பதியின் கொஞ்சல்ஸ் நடந்து கொண்டிருக்கிறது.
ஈரப் புடவையை உதறிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, வேகமாக எங்கிருந்தோ வந்த அவன், அவளை பின்னிருந்து அப்படியே அள்ளிக் கொண்டான்.
அவளின் வெட்கம் தெறித்த காதல் கூச்சல் கேட்டுதான் நான் அவர்களைப் பார்த்தேன். ஐம்பதை தொடவிருந்த என் Sit ups இருபத்தி ஏழிலேயே நின்றுவிட்டது. அதற்கப்புறம் கொடியிலிருந்த துணியுடன் சேர்த்து இருவரும் தங்களை சுற்றிக் கொண்டார்கள். அவர்களின் கொஞ்சலை பார்க்காமலிருக்க முயற்சி செய்தேன். அதற்குள் அவன் முத்தம் கொடுத்துவிட்டான்.
வொர்க் ஃப்ரம் ஹோம், காதல் ஃப்ரம் ஹோமாக மாறிக் கொண்டிருக்கிறது.
நான் அதற்கு கொரோனா முத்தம் என்று பெயரிட்டிருக்கிறேன்.
உற்சாகமான காலை வணக்கம்! சியர்ஸ் மக்காஸ்!
- ISR Selvakumar