சென்னையில ஒரு வாரத்துக்கு முன்னாடியே மார்கழிக்கு லீவு கொடுத்துட்டாங்க போலருக்கு. அது எங்கேயோ மலையேறிடுச்சு. அதனால் இன்று அதிகாலை போகி சம்பிரதாயங்களின் போது குளிர் இல்லை, குப்பையும் குறைவாகத்தான் இருந்தது. அதனால் வருடா வருடம் எடுக்கும் போகி போட்டோவே இந்த முறை மறந்துவிட்டது.
ஏழு தீக்குச்சிகள் சீறி அணைந்தபின்னும் திடீர் மழையில் நனைந்த பாயும், பழைய அட்டைப்பெட்டிகளும், காலண்டர்களும், எரிவதற்கு அடம்பிடித்தன. கசிந்த புகைக்கு நடுவில் நான் சலித்துக் கொண்டபோது ஒரு பட்டுப்புடவை பெண்மணி வேகமாக கடந்து சென்றார். காமிரா இருந்திருந்தால் ஒரு குறும்படத்தின் முதல் காட்சியை நேச்சுரல் போகி லைட்டிங்கில் எடுத்திருக்கலாம்.
ஒரு வழியாக போகி நன்றாக எரிந்த போது, அதன் வெம்மை முட்டிவலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அதனால் நான் நகராமல் நின்றிருந்தேன். அந்தப் பெண்மணி திரும்ப வந்து கொண்டிருந்தார். இந்த ஆள் பார்ப்பதற்கு முன் கடந்துவிட வேண்டும் என்கிற வேகம் அவருடைய நடையில் இருந்தது. இந்தக் காட்சியை அவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் எப்படி எழுதியிருப்பார் என்கிற ஆவலுடன் ஹேப்பி போகி!
சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான காலை வணக்கம்!