எண்பதுகளில் முதல் முதலாக சென்னை வானொலியில் பேசுவதற்கு சிறுகதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேரமைதி சூழந்த ஒலிப்பதிவு அறை. நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்னருகே வந்து நின்றார். நீ பேசப்போவதை இந்த நாடே கேட்கப்போகிறது. எனவே வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும், என்று அறிவுறுத்திச் சென்றார். அவ்வப்போது ஒலிப்பதிவை நிறுத்தி சில வார்த்தைகளை திருத்தினார்.
ஆனால் 2025ல் எல்லாமே மாறிவிட்டது. எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலை வந்துவிட்டது. குறிப்பாக தமிழ் செய்தி காட்சி ஊடகங்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இவர்களுக்கு எடிட்டர்கள் என்று தலைமைப் பொறுப்பில் எவராவது இருக்கிறார்களா என்று சந்தேகம் வருகிறது.
கரூர் உயிரிழப்புகளுக்கு காட்சி ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற தன்மைதான் பெரும் காரணம். அது ஒரே நாளில் நடந்துவிடவில்லை. முட்டாள்தனங்களை, பெரும் மாற்றங்கள் என்று தினம் தினம் திரித்துக் கூறியதால் நிகழ்ந்தவை. அது ஒரு மூளைச்சலவை!
கடந்த ஒரு மாதத்தை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முட்டாள்தனங்களையும், பொறுப்பற்ற கோமாளித்தனங்களையும் உயர்த்திப்பிடித்து அதனை மக்கள் எழுச்சி என்று சித்தரித்தார்கள். வெற்றுச் சவடால்களையும், கட்டுப்பாடுகளுக்கு அடங்கமாட்டேன் என்ற குரல்களையும் புரட்சி வந்துவிட்டது என வர்ணித்தார்கள்.
புதியதலைமுறை, பாலிமர் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்! நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், உங்கள் பொறுப்பு என்ன என்பதை அறிந்தவர்களாக இருந்தால், தொடர் நேரலை என்கிற பெயரில் உங்கள் செய்தி நிறுவனங்கள் சார்பாக உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை காது கொடுத்து கேளுங்கள். ஒரே ஒரு வார்த்தையைக் கூட ஊடகத்தரமான வார்த்தை என்று உங்களால் கூற இயலாது. அனைத்தும் நஞ்சு தோய்ந்தவை. இலக்குகள் இல்லாமல் தியேட்டர் வாசலில் ரகளை செய்துகொண்டிருந்த இரசிகர் திரளை தூண்டிவிட்டு, நீ எது வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்காகவும் அடங்காதே, நீ எதை அடித்து நொறுக்கினாலும் அது துணிச்சல் என்று பாராட்டி, மூளைச்சலவை செய்து அவர்களை மூளையில்லாத ரௌடிக் கூட்டமாக மாற்றிவிட்டீர்கள்.
இப்போது கூட உங்கள் செய்திகளில் பலியானவர்கள் பற்றிய வருத்தத்தின் சாயல் கூட இல்லை. வழிதவறிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அறிவுறுத்த இது அரிய சந்தர்ப்பம். மாறாக அரசியலில் எதிரெதிர் நிலையில் நிற்போரை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் இப்படியே தொடர்ந்தால் கரூர் துர்மரணங்களுக்கு மட்டுமல்ல, இதற்குப் பின்னும் ஏதாவது நடந்தால் அதற்கும் உங்கள் பொறுப்பற்ற தன்மைதான் முதல் காரணம்.
இளைஞர்களை முழுவதும் சீர்குலைத்தபின்தான் உங்களுக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதில்லை. அன்று சென்னை வானொலியில் எனக்கு அறிவுரை கூறிய அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். ஊடகத்தில் உதிர்க்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பு மிக்கது. அது வெல்லும் அல்லது கொல்லும்! நீங்கள் வெல்பவரா? கொல்பவரா?





