கமல் சண்டைக்காட்சிகளிலும் சகலகலா வல்லவன்தான். அதனால் அவர் கௌதம் மேனனுடன் இணைந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல ஒரு மாஸ் சண்டைக்காட்சியும் வேட்டையாடு விளையாடு படத்தில் அமைந்தது. விசில் பறந்த அந்த சண்டைக்காட்சியை இங்கு கிளிக் செய்து பாருங்கள்
“இங்க எல்லோரும் பைத்தியம் தான். பணப் பைத்தியம்…பொம்பளப் பைத்தியம்” – இவை பைத்தியக்காரன் குணாவிடம் அபிராமி கூறிய வார்த்தைகள். இச்சமூகத்தைச் செருப்பால் அடிக்கும் சொற்கள். நாகரீக மனிதனாய் வாழும் ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் அவை. ஆசை என்னும் போர்வைக்குள் உறங்கிக்கொண்டு, சக மனிதனை காயப்படுத்துபவர்களைவிட உன்னதமான, மனிதனாய் தான் அபிராமியின் கண்களில் விழுகிறான் குணா.
ஆமாம் யார் அந்த குணா? வாழ்க்கை, கல் போல கீழே விழும் என்று கூறிய டாக்டரிடம், தான் இறகைப் போல் பறக்க நினைப்பவன் என்று கூறிய பைத்தியக்காரன். காதல் எப்படியான உணர்வென்பதை மனித மிருகங்களுக்கு உணர்த்திய பிராந்தன். வெள்ளித்திரை எனும் தொட்டிலில் அவன் தோன்றி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் ‘கண்மணி’யின் வாயிலாய் வாழ்ந்து வந்த இந்த குணாவைப் பற்றி...
பட இயக்குநர் சந்தானபாரதிக்கு அது வாழ்நாள் அனுபவமாய் அமைந்திருக்கும். ஆடையமைப்பு, உடல்மொழி போன்றவற்றில் மட்டும் மாற்றம் செய்யாமல், தோற்றத்தையே மாற்றி, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார் கமல். தன் பொன்னிற தேகத்தில் கரியைப் பூசிக்கொண்டு மனநோயாளியாய் வாழ்ந்து காட்டினார். ரேகா, ஜனகராஜ், எஸ்.பி.பி, கிரிஷ் கர்னாட் என்று நிறைய நடிகர்கள். ஆனாலும் படம் முழுவதுமே கமல் தான் ஒன் மேன் ஷோ.
முதன்முதலில் அபிராமியை கோவிலில் பார்த்த தருணம்.....குழந்தை முகத்தோடும் சரி, அவளைத் தூக்கிக்கொண்டு மதிகெட்டான் சோலையில் சுற்றித் திரிந்த காட்சிகளிலும் சரி, ஒவ்வொரு காட்சியிலும், ஸ்கோர் செய்த கமல், ஒரு மனநோயாளியாக கண்முன் வாழ்ந்திருப்பார். இதெற்கெல்லாம் பலம் தருகிறது இளையராஜாவின் இசை. தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றை குணாவின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இசைஞானியின் அந்த மெட்டுகள் காதலை ஒவ்வொரு காதுக்கும் கடத்தின.
‘கண்மணி அன்போடு காதலன்’ பாட்டு இன்று சந்தோஷ் நாராயனனை ரசிக்கும் ‘ஜென் Z’ யுவ/யுவதிகளின் பிளே-லிஸ்டிலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். காதலனின் உணர்வை அப்படிய கடத்திச் செல்லும் வாலியின் வரிகள் காலத்தை வென்றவை. இன்னும் நிலைத்து நிற்பவை. இவர்களுடன் கானகத்தையும் காதலையும் ஒருசேரப் பதிவு செய்திருக்கும் வேனுவின் ஒளிப்பதிவு. வசனமும் மெட்டுகளும் சேர்ந்து ஒலித்த அந்தப் பாடல், என அனைத்துமே சினிமாவின் மைல்கல். காதலிகளுக்குக் கடிதம் எழுத நினைக்கும் ஒவ்வொருவரின் ஆப்லங்கேடாவிலும், முதலில் ஸ்டிரைக் ஆவது நிச்சயம் கண்மணியும் அபிராமியும் தான்.
இவர்களைத் தாண்டி, நிச்சயம் பேசவேண்டிய ஓர் நபர், ஜான். இந்த சரித்திரக் காவியத்தின் திரைக்கதையாசிரியர். குணா என்னும் பைத்தியக்காரக் கதாபாத்திரத்தை ரோமியோவிற்கும் மஜ்னுவிற்கும் நிகராக்கியவர். தன்னை ஒருவன் துப்பாக்கியால் சுட்டபோது, பொறுமையாய் பேசிக்கொண்டிருந்தவன், சிறு குருவியைக் கொன்றதனால் வெகுண்டெழுகிறான். தன் கற்பனையில் தோன்றிய பெண்ணுக்காக தன் வாழ்க்கையையே இழக்கவும் தயாராயிருக்கிறான். இப்படியொரு கதாப்பாத்திரம் தந்த ஜானிற்கு கோடி லைக்ஸ்.
அபிராமியை அவன் சிறைபிடித்திருந்தான், ஆனால் அவளிடம் வன்மம் காட்டவில்லை. தெய்வமாய், தேவதையாய் மட்டுமே பாவித்தான். காதல் வெறும் உடல் சார்ந்த உணர்வில்லை என்பதை மிக அற்புதமாகச் சொன்ன இடத்தில்தான் குணா வெற்றியடைகிறது. அவளுக்காக எதையும் செய்ய துணிந்தவன். பெண்மையை மதிக்கத்தெரிந்த அவனைப் போன்றவர்கள் இந்த உலகில் பைத்தியமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
எத்தனையோ படங்களில், காட்சிகளில் இந்தப் படமும் அதன் காட்சிகளும் இமிடேட் செய்யப்பட்டதுண்டு. ஆனால் இதுவரை அப்படத்தை ரீமேக் செய்ய யாரும் நினைக்கவில்லை. மீண்டும் இந்த குணசேகரனுக்கு உயிர்கொடுக்கமுடியுமா? என்பது சிந்திக்கவேண்டிய நிமிடங்கள்.
எந்த ஒரு மனிதனுக்கும் காதல் வரும். அந்தக் காதல் உண்மையாய் இருந்தால், அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதற்கு குணா, மிகச்சிறந்த உதாரணம். குணாவின் காதலை அந்த கடவுள் கூடப் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் அவன் சேர நினைத்த பெளர்ணமி நாளிலே அவளைப் பிரிந்துவிடுகிறான் குணா. உணர்வுகளின் ஆகச்சிறந்த ஸ்பரிசம் காதல். உண்மையான காதல்களை, காதலர்கள் புரிந்துகொள்வதில் கூட சிக்கல் ஏற்படலாம். அதையும் தாண்டி காதல் வாழும்.
நன்றி திரு. மு.பிரதீப் கிருஷ்ணா (விகடன்) E.N. Babu Kamal
#யாதெனக்கேட்டேன் #Guna #Illayaraja #SanthanaBharathi #Kamal #Kamalahasan
இதையும் வாசியுங்கள் :
மூன்றாம் பிறை - படம் முடிந்தபின்னும் எழுந்து கொள்ள மனமில்லை
சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'
மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான். விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான்.
உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர். பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.
மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு.
- இ.என்.பாபு