#StayAtHome அண்ணாத்த!
ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.
திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.
ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.
கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.
நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.
நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.
பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.
- ISR Selvakumar
அன்புச் செழியன்!
திரையுலகின் ஒரு பாதி அவரை ஆதரிக்கிறது. இன்னொரு பாதி அவரை கொடுரனாக சித்தரிக்கிறது.
அவர் கந்துவட்டிக்கு விடுபவர் என்பதை இருதரப்பும் மறுக்கவில்லை.
தமிழ் சினிமாவில் அவருடைய பணம் விளையாடுகிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை அவருக்கு ஆளும்கட்சி செல்வாக்கு இருக்கிறது.
ஆனாலும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அன்புச்செழியன் பற்றி பேசுவதில்லை.