Log in

Register



நம்பிக்கையின் கீற்று!
அனாதையாகக்கிடந்த முதியவரின் உடலை, கொரோனாவுக்கு அஞ்சாமல் அடக்கம் செய்த திணைநிலவாசிகள்!

சிலநாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய எவருமே முன்வராத ஒரு அவலத்தை நாம் கண்டோம். களத்திலிருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கைதட்டுகிறோம், விளக்கேற்றுகிறோம் என்று போலித்தனமாக டி.விக்கு போஸ் கொடுத்துக் கொண்டாடியவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணர்ந்த சம்பவம் அது. இருக்கட்டும்! இது போன்ற போலித்தனமானவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். இதை அறிந்தவர்களில் சிலர் கோபப்பட்டார்கள், சிலர் கேலி செய்தார்கள், சிலர் அமைதியாகக் கடந்தார்கள்.

வெகு சிலர் நடந்தது தங்கள் இருப்பையே காட்டிக் கொள்ளாமல் சலனமற்று இருந்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலகமே கைவிட்டாலும், கடவுளே நிராகரித்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தாமே முன்வந்து உதவக் கூடியவர்கள். அவர்களில் சிலர்தான் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் என்கிற நாடகக் கலைஞர்கள். இன்று அவர்கள் செய்த நற்பணி அளப்பறியது.

சென்னை செங்குன்றம் பகுதியில் 73 வயதுதக்க முதியவர் பிளாட் பாரத்தில் அனாதையாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் திணைநிலவாசிகளை
தொடர்பு கொண்டார்கள். திணைநிலவாசிகள் துளியும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இன்று அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார்கள்.

கொரோனாவை விட நிராகரிப்பு கொடுமையானது. வறுமை, முதுமை, குடும்பத்தகராறு, மனப்பிறழ்வு என பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் நம் அனைவருக்கும் நம்பிக்கை தரும்விதமாக சில நல் உள்ளங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள்.

இந்த நாடும், வனமும், காடும், வானமும் இவர்களைப் போன்ற நல் உள்ளங்களால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியிருக்கும் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் நண்பர்களுக்கு நன்றி!

Published in ISR Selva speaking
படத்தின் டிரைலர் தந்துள்ள எதிர்பார்ப்பை படம் பூர்த்திச்செய்யவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சனை தான் ஆனால் தீர்வினை மெடிக்கல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ, கொண்டுச்செல்வதுப்
போல் காட்சி அமையவே இல்லை. 
 
தாராள பிரபு
 
ஸ்பேம் டோனேசன் என்று ஒரு முறையின் மூலம் குழந்தையை உருவாக்கலாம். ஆனால் டாக்டர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு வரும் அனைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரச்சனை. பெண்களுக்கு எந்த பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு ஆணின் பிரச்சனையையும் மாறுபடலாம். அதற்கு வேற வேற டிரிட்மென்ட்  கண்டிப்பாக பண்ணக்கூடிய கேஸ்சஸ் தான்.  அப்போ இயல்பான முறையில் டிரிட்மென்ட் பண்ணிருக்கலாமே. எந்த வகையிலும் இயலாமையை சரிச்செய்ய முடியாத பட்சத்தில் ஸ்பேம் டோனேஷன் பற்றிப்பேசியிருக்கனும். அத விட்டுட்டு
எடுத்த எடுப்பலையே ஸ்பேம் டோனேஷனை பற்றி கூறுவது மார்க்கெட்டிங் பண்ணற மாதிரி இருந்தது. 
 
வருபவர்களுக்கு கன்செல்டிங் பண்ணற காட்சியிருந்தது. பரிசோதனை பண்ணற  காட்சியோ, பலதரப்பட்ட டிரிட்மென்ட் பண்ணக்கூடிய காட்சியோ, அதற்கும் சரி செய்ய முடியல. அதுக்கு பிறகு ஸ்பேம் டோனேசன் நோக்கி வருமாறு காட்சிகள் அமைவே இல்லை. 
 
ஒரு ஆணின் ஒரு முறை வெளியேறும் விந்து அணுவில் மில்லியன் அணுக்கள் இருக்கும் என்பதும் அது குழந்தையை உருவாக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சரியான உணர்ச்சி இல்லாமல் எப்போமே மேன்ஸ்பேஷன் செய்வது உடலுக்குச் சரியானதா?
 
ஒரு ஆணின் ஸ்பேமில் 49 குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் அவருக்கும் மற்றக் குழந்தைக்கும் சமந்தமே இல்லாத மாதிரியான உணர்வை  தான் வெளிப்படுத்துகிறது. 
 
அந்த குழந்தைகள் அனைத்தும் வெவ்வேரு 
தாயின் வயிற்றில் பிறந்தாலும் ஒரே ஸ்பேம் தான் கருவை உருவாக்கியிருக்கும். ஜின் உடைய மரபு யார் வழியில் இருக்கும். அந்த குழந்தைகளுக்குள் வருங்காலத்தில் கல்யாணம் பண்ண இயலுமா?. இல்ல தங்கை தம்பியென்ற உறவுகள் உருவாகுமா? படத்தில் சொல்லவா இல்லை.
 
இந்த காலத்தில் கல்யாணமான அடுத்த நாளே, தனக்கு குழந்தை வேணுமென்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் இந்த கதாநாயகி நினைக்கிறாள். அது எதார்த்ததிலிருந்து பின் தங்கியுள்ளது. மேலும் கதாநாயகிக்குனு ஒரு முன்கதை சொல்லனுமென்றுச்சொன்ன மாதிரி இருந்தது.
 
கதாநாயகிக்கு கருப்பை பிரச்சனைக்கு கன்செல்டிங்  மட்டும் பண்ணிட்டு பரிசோதனையோ டிரிட்மென்டோ எடுப்பது போல் காட்சிகள் வரவே இல்லையே. குழந்தையின்மையை சரிச்செய்ய ஸ்பேம் டோனேஷனை மட்டும் போகஸ் பண்ணி படம் நகருது. மற்றக்கேள்விகளுக்கு பதில் படத்தில் இல்ல. படத்தின் இறுதிகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு படம் நகவே போலீஸ் வரும் காட்சியை வைக்கனுமேனு வைச்சமாதிரி இருந்தது.
 
ஒரு நல்ல விஷயம் என்னனா நாம் நினைப்பது போல ஸ்பேம் பத்தி பேசவது அவ்வளோ டேபோ டாப்பிக் இல்லங்கறது மட்டும்தான். பழைய விவேக்கை பார்க்க முடிந்தது. ஹரிஸ்க்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
 
மொத்தத்தில், ஸ்பேம் என்கிற வார்த்தையை பற்றி மட்டும் அடிக்கடி பேசிட்டு, அறிவியல் பூர்வமாகவும் மெடிக்கல் ரீதியாகவும் பேசப்படாத இந்த நகைச்சுவை படம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க வேண்டியவை. 
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week
Sunday, 22 March 2020 07:11

#StayAtHome அண்ணாத்த!

#StayAtHome அண்ணாத்த!

ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.

ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.

நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.

பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking
Wednesday, 18 March 2020 16:24

கொரோனா முத்தம்

பத்து வீடு தள்ளியிருக்கிற ஒரு மொட்டை மாடியில் துணி காயப் போடுகிற சாக்கில் ஒரு தம்பதியின் கொஞ்சல்ஸ் நடந்து கொண்டிருக்கிறது.

ஈரப் புடவையை உதறிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, வேகமாக எங்கிருந்தோ வந்த அவன், அவளை பின்னிருந்து அப்படியே அள்ளிக் கொண்டான்.

அவளின் வெட்கம் தெறித்த காதல் கூச்சல் கேட்டுதான் நான் அவர்களைப் பார்த்தேன். ஐம்பதை தொடவிருந்த என் Sit ups இருபத்தி ஏழிலேயே நின்றுவிட்டது. அதற்கப்புறம் கொடியிலிருந்த துணியுடன் சேர்த்து இருவரும் தங்களை சுற்றிக் கொண்டார்கள். அவர்களின் கொஞ்சலை பார்க்காமலிருக்க முயற்சி செய்தேன். அதற்குள் அவன் முத்தம் கொடுத்துவிட்டான்.

வொர்க் ஃப்ரம் ஹோம், காதல் ஃப்ரம் ஹோமாக மாறிக் கொண்டிருக்கிறது.
நான் அதற்கு கொரோனா முத்தம் என்று பெயரிட்டிருக்கிறேன்.

உற்சாகமான காலை வணக்கம்! சியர்ஸ் மக்காஸ்!

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30