சிவாஜியின் குரலை சென்னை வானொலி நிலையம் நிராகரித்ததா?
சிவாஜி 'பராசக்தி'யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். 'இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்கமாட்டேன்.'
இந்தச் சம்பாசணை எனக்கும் சிவராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்தது. சிவராமகிருஷ்ணன் லண்டன் பிபிசி தமிழோசையில் பலவருடங்கள் ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார். பணி நிமித்தமாகப் பலரைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்திருக்கிறார்.
தினமலர் (ஏப்ரல் 16, 2016) இதழில் சிவாஜியின் குரல் என்ற கட்டுரையில் அ.முத்துலிங்கம் என்பவர் எழுதியுள்ளதை அப்படியே கொடுத்திருக்கிறேன். (முழுக் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்) இந்தத் தகவலை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்தத் தகவல் உண்மையா?