ஆஸ்கர் (2022) விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ஜெய் பீம். ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தமிழ் சினிமா இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக சூர்யா இரசிகர்கள் இப்போதே கொண்டாடடத் துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த வருடம் சூரரைப் போற்று படமும் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் இரட்டை மகிழ்ச்சியில் சூர்யா இரசிகர்கள் இப்போதே ஜெய் பீம் படத்துக்கு ஆதரவாக ஆன்லைனில் பதிவிடத் துவங்கிவிட்டார்கள்.
என்னைக் கேட்டால் ஜெய் பீம் படம் நிச்சயம் சர்வதேச தரத்தில் உள்ளது என்றுதான் சொல்லுவேன். நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சர்வதேசத் தரம்தான். குறிப்பாக மணிகண்டனும், லிஜாமோலும் வேறு எவருடனும் ஒப்பிடவே முடியாத அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்கள். அவர்களை இதற்கு முன் அறிந்திராதவர்கள் அவர்கள் நிஜமாகவே பூர்வகுடிகள்தான் என்று நினைத்துவிட வாய்ப்பு உண்டு. மற்ற நடிகர்களும் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இசையிலும், ஒளிப்பதிவிலும் தங்களால் சர்வதேச தரத்தை எட்ட முடியும் என்று நிருபித்திருக்கிறார்கள். முத்தாய்ப்பாக இயக்குநர் ஞானவேல் ஒவ்வொரு நொடியையும் மறக்கவே முடியாத தருணங்களாகத் தந்திருக்கிறார்.
ஆஸ்கரோ, கோல்டன் குளோபலோ எதுவாக இருந்தாலும் அந்த ஜுரிகளை பார்க்க வைப்பதுதான் இப்போது தயாரிப்பாளருக்கு உள்ள சவால். அவர்களில் பெரும்பாலான ஜுரிகளை பார்க்க வைத்துவிட்டால், விருது கை கூட வாய்ப்பு அதிகம் உள்ள படம்தான்.
ஆஸ்கர் விருது பெற்றவரும், ஆஸ்கர் தேர்வுக் குழுவில் ஒருவருமாக இருந்த ஏ.ஆர்.இரகுமானிடம் தயாரிப்பாளர் யோசனை கேட்கலாம். அது ஜெய்பீம் படத்துக்கான வாய்ப்பை அதிகமாக்க உதவும்.
ஜெய் பீம் படக் குழுவினர் அனைவருக்கும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் மற்றும் யாதெனக்கேட்டேன் குழுவினர் சார்பில் ஆஸ்கர் வெல்ல வாழ்த்துகள்!