என் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அதில் அவர் நடிக்கும் நாடகம், சினிமா, சூட்டிங் மற்றும் அன்றன்று நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதியிருப்பார். ஏதோ ஒரு பக்கத்தில் இயக்குநர் ஸ்ரீதர் பற்றி எழுதியிருந்தார். ஓ மஞ்சு படப்பிடிப்பாக இருக்கலாம். செட்டில் கவனிக்க முடியாத தூரத்தில் இருக்கும் துணை நடிகர்களைக் கூட ஸ்ரீதர் கவனித்தார். அவர்களின் ஆக்ஷன், ரியாக்ஷன்களை சரி செய்தார் என்று வியப்பாக எழுதியிருந்தார்.
ஓ மஞ்சு படத்தில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள போஸ்ட் மாஸ்டராக நடித்திருந்தார். தந்தி கொடுக்க வரும் தேங்காய் ஸ்ரீனிவாசனின் டைமிங், பாடி லாங்குவேஜ் மற்றும் ஏறி இறங்கும் உச்சரிப்பு அட்டகாசம். அவருடைய அத்தனை சேட்டைகளுக்கும் சிரிக்காமல் ரியாக்ஷன் கொடுத்திருப்பார். பிறகு தன் முறை வரும்போது அப்பாவியாக முகத்துடன் அவர் பேசுகிற வசனங்களும் அதற்கு தேங்காயின் ரியாக்ஷன்களும் அமர்க்களம். குறிப்பாக தேங்காய் தந்தியை தமிழில் சொல்லச் சொல்ல, அதற்கு என் அப்பா ஐ.ஸ்.ஆரின் இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன்... சூப்பர்!
இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் நினைவு தினம். பல புதுமைகளை தமிழ்சினிமாவிற்கு அளித்த ஸ்ரீதரின் இயக்கத்தில் எங்கள் அப்பா ஐ.எஸ்.ஆரும் நடித்தார் என்பதில் எங்களுக்குகெல்லாம் பெருமையே.
பாமா விஜயம் படத்தில் எங்கள் அப்பாவுக்கு ஐ.எஸ்.ஆருக்கு நல்ல பெயர் கிடைக்க காரணம் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான். படம் வெளியானபோது திருடனாக நடித்த காட்சிக்கு எக்கச்சக்க வரவேற்பு. கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளும் என் அப்பா ஐ.எஸ்.ஆரை பாராட்டி விமர்சனம் எழுதின. இத்தனைக்கும் அவர் நடித்தது ஒரே ஒரு காட்சிதான். இன்று கூட என் அப்பா நடிப்பில் சிலருக்கு உடனே ஞாபகம் வரும் காட்சி, பாமா விஜயம் காட்சிதான்.
பாமா விஜயம் படத்தின் இயக்குநர் கே.பாலச்சந்தர். அப்போதெல்லாம் எங்கள் அப்பா பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் இருப்பார். சௌகார், ஸ்ரீகாந்த், ஜெயந்தி, நாகேஷ் வரிசையில் என் அப்பாவும் பாலச்சந்தர் ரெகுலர்களில் ஒருவர். ராகினி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் மேடை நாடகம் போட்டதிலிருந்தே கே.பி க்கு என் அப்பா பழக்கம். அவருடைய அனைத்து நாடகங்களிலும் என் அப்பா நடித்திருக்கிறார். அதனால் பாமா விஜயம் படத்திலும் இருந்தார். ஆனால் ஒரே ஒரு காட்சிதான்.
பாமா விஜயம் படத்தின் விநியோக உரிமை ஜெமினி ஸ்டுடியோ திரு. எஸ்.எஸ்.வாசன். அதனால் படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய அவர் ஐ.எஸ்.ஆருக்கு கூடுதலாக குளோசப் காட்சிகள் வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட காட்சியில் பல இடங்களில் என் அப்பாவுக்கு மட்டும் குளோசப் இணைக்கப்பட்டது. படம் வெளியானபின் வாசனின் கணிப்பு வென்றது. என் அப்பாவிற்கு நிறைய நல்ல பேரும், புது இரசிகர்களும் கிடைத்தார்கள். அதற்கு அந்த குளோசப் காட்சிகள் உதவியதாக என் அப்பா அடிக்கடி எஸ்.எஸ்.வாசன் பற்றி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார். அதே படம் ஹிந்தியில் தயாரானபோது எஸ்.எஸ்.வாசனும், எஸ்.எஸ். பாலனும் இணைந்து இயக்கினார்கள். படத்தின் பெயர் ”தீன் பஹுரானியன்”.
ISR செல்வகுமார்
#ActorISR #HBDisr #BamaVijayam #ThiefScene #KBalachandar #SSVasan #Closeup #GeminiStudios