How to name it - 2
மிக்க மகிழ்ச்சி இசைஞானியே!
"சினிமா பாடல்கள் மட்டும்” என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து எப்போது வெளியே வருவீர்கள் என்ற பல வருடங்களாகக் ஏங்கிக் கொண்டிருந்தேன்.
சினிமாப்பாடல்கள்தான் உங்களை எங்களுக்குக் கொடுத்தது என்றாலும், அதையும் தாண்டி உங்கள் கற்பனையின் வீச்சு பரவக் கூடியது.
திரைக்கதை, சூழல், பல்லவி, சரணம், மீட்டர் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், How to name it, Nothing but wind போன்ற தனி இசைத் தொகுப்புகளில் உங்களின் இசைப் பிரவாகத்தைக் கேட்டோம். அது தொடரும் என்றே நினைத்தோம். ஆனால் காலம் செல்லச் செல்ல திரை இசை உங்களை சுவீகரித்துக் கொண்டுவிட்டது.
எல்லைகள் எதுவுமின்றி உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய பல வருட ஆதங்கம்.
ஒரு வேளை இளையராஜாவை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தால், நான் அவரிடம் சினிமா பாடலுக்கு இசையமைக்க கேட்க மாட்டேன். ஒரு தனித் தொகுதி (Album) வெளியிடுங்கள் என்றுதான் கேட்பேன், என என் நெருக்கமான நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.
நேரமோ, வடிவமோ கட்டுப்படுத்தாமல், இளையராஜாவின் கற்பனை மட்டுமே எல்லைகளாக உள்ள ஒரு தளத்தில் அவர் மீண்டும் இயங்க வேண்டும் என்பது என் கனா!
என்னுடைய அந்த நீண்ட காலக் கனவு நிறைவேறப்போகிறது என்றே நினைக்கிறேன்.
How to name it 2 வெளியாப்போகிறது என்று இளையராஜாவே கூறியிருக்கிறார். மிகுந்த மகிழ்ச்சி! அவரது இசையில் இதுவரை நாம் அறிந்திராத புதுப்புது பரிமாணங்களை இரசிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது.
வாருங்கள் இசைஞானியே!
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்