நமது இந்தியாவை பாரத மாதா என்று ஒரு தாய்க்கு நிகராக நாம் கூறுகிறோம். அந்த பாரத மாதாவின் குரலாக இருந்தவர்தான் லதா மங்கேஷ்கர். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் எனும் “இசைக் குயில்” செம் மொழியான தமிழ் மொழியிலும் பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் என்ற பெயரை உச்சரித்ததுமே தமிழ் திரை இசை இரசிகர்களின் மனதில் வளையோசை கல கல கலவென என்கிற இளையராஜாவின் கீதம் ஒலிக்கத் துவங்கிவிடும். காதலர்களின் தேசிய கீதமாக அறியப்படும் இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1988. ”வளையோசை கலகல” பாடலுக்கு முன்பு தமிழ் இரசிகர்கள் கொண்டாடிய லதா மங்கேஷ்கர் பாடல் எதுவென்றால் ”ஆராரோ ஓ ஆரோரோ” என்கிற பாடல்தான். பிரபு நடித்த ஆனந்த் என்கிற இந்தப்படத்துக்கும் இசையமைத்தது இசைஞானிதான்.
லதா மங்கேஷ்கர் ”ஆராரோ” பாடலைப்பாட மிக முக்கியமான காரணம் யார் தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன். லதா மங்கேஷ்கர் நடிகர் திலகத்தை தன் உடன் பிறவா அண்ணனாக நினைத்து அன்புகாட்டியவர். அவர் மேல் உள்ள பாசம் காரணமாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஆனந்த் படத்தில் பாட உடனே ஒப்புக் கொண்டார்.
மும்பையில் பாவமன்னிப்பு படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் உடனே மெட்ராஸ் வந்துவிட்டார். நேரே சிவாஜியின் வீட்டுக்குச் சென்று தனது சகோதரி மற்றும் குடும்பத்தாருடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். அதுதான் சிவாஜியுடன் அவரது முதல் சந்திப்பு.
நடிகர் திலகம் பார்ப்பதற்கு லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கர் போலவே இருந்தாராம். அதனால் தன் தந்தையை நினைவுபடுத்திய நடிகர்திலகத்தை தனது ராக்கி சகோதரனாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தினார் அவர். லதா மங்கேஷ்கர் குடும்பமும், நடிகர் திலகம் குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே குடும்பமாக மாறிப்போனார்கள். நடிகர் திலகம் மறைந்த பின் அவர் நினைவாக, அவர் பெயரிலேயே ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் லதா. மும்பையில் இன்னமும் அந்த ஆம்புலன்ஸ் சேவை தொடர்கிறது.
1942 ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் தன்னுடைய முதல் திரை இசைப்பாடலைப் பாடினார். அது “கிதி ஹசால்” என்ற மராத்திப் பாடல். தமிழ் சினிமாபை் பொறுத்தவரை 1952ல் ஆண் (முரட்டு அடியாள்) என்ற ஹிந்தி டப்பிங் படத்தில் 4 பாடல்களைப் பாடியிருந்தார். தமிழ் சினிமாவில் அவரது குரல் அப்போதுதான் முதன் முதலாக ஒலித்தது.
1955-ம் ஆண்டு ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பான ”வான ரதம்” வெளியானது. அதில் நௌஷத் இசையில் ”எந்தன் கண்ணாளன்” என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால் இவை எல்லாமே ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பாடல்கள். எனவே அவர் பாடிய முதல் நேரடி தமிழ் பாடல் என்றால் இசைஞானியின் ஆராரோ பாடல்தான்!
என் புள்ளை பிரபுவுக்காக பாடுகிறேன் என்று பணம் எதுவும் வாங்காமல் அவர் பாடிக்கொடுத்த பாடல்தான் ஆராரோ பாடல். அவர் பாடிய ஆனந்த் , சத்யா, என் ஜீவன் பாடுது, கண்ணுக்கொரு வண்ணக்கிளி உள்ளிட்ட படங்கள் அனைத்துக்கும் இசை இளையராஜா. தமிழில் வேறு எவர் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியதில்லை.
1942ல் பாடத் துவங்கிய இசைக் குயில் 1998ல் இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுடன் தில் சே என்ற இந்திப் படத்துக்காக கை கோர்த்தார். நெஞ்சினிலே நெஞ்சினிலே என்று இசையரசி ஜானகி பாடிய பாடலை இந்தியில் ஜியா ஜிலே என்று லதா மங்கேஷ்கர் பாடினார்.
ரங்தே பசந்தி படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஏ.ஆர்.இரகுமான் பாடியுள்ள லுக்கா சுப்பி என்கிற பாடலைக் கேட்டால் நம்மையும் அறியாமல் கண்களில் நீர் கசியும். ஏ.ஆர்.இரகுமானுக்கும் அவருக்குமான உறவு தாய்க்கும், மகனுக்கும் உள்ள உறவு போன்றது.
என் தந்தையின் அறையில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் இருந்தது. கண்விழிக்கும்போதே லதா மங்கேஷ்கர் முகத்தைப் பார்த்துவிட்டுதான் அந்த நாளை துவக்குவார் என் அப்பா, என்று தன் தந்தை சேகர் பற்றி நினைவு கூர்கிறார் ரகுமான். அதை பார்த்துப் பார்த்து நான் சிறுவனான இருந்தபோதே எனக்குள்ளும் லதாஜியின் இசை நிரம்பிவிட்டது என ரகுமான் ஒரு முறை குறிப்பிட்டார்.
ரகுமான் தன்னுடைய இரங்கல் செய்தியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். நான் லதாஜியை சந்திக்கும் வரை, பாடுவதற்காக அதிகம் மெனக்கெட்டதில்லை. மேடை ஏறியதும் பாடி விடுவேன். அவ்வளவுதான். ஆனால் லதாஜியுடன் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மாறிவிட்டேன். தான் பாட வேண்டிய பாடல்களை லதாஜி மேடை ஏறும்வரை பயிற்சி செய்து கொண்டே இருந்தார். பல்லாயிரக் கணக்கான பாடல்கள் பாடிய பின்னும், பயிற்சிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.
அவர் பாடத் துவங்கிய காலத்தில், நௌஷத் அவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் 10 நாட்கள் தொடர்ந்து பயிற்சி கொடுப்பாராம். அதை இன்றும் கடைப்பிடிக்கிறார் லதாஜி. நானும் இப்போது அதை கடைப்பிடிக்கிறேன். ஒவ்வொரு கச்சேரிக்கு முன்பும் தம்பூரா வைத்து பயிற்சி செய்கிறேன் என்றார் ரகுமான்.
“இங்க எல்லோரும் பைத்தியம் தான். பணப் பைத்தியம்…பொம்பளப் பைத்தியம்” – இவை பைத்தியக்காரன் குணாவிடம் அபிராமி கூறிய வார்த்தைகள். இச்சமூகத்தைச் செருப்பால் அடிக்கும் சொற்கள். நாகரீக மனிதனாய் வாழும் ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் அவை. ஆசை என்னும் போர்வைக்குள் உறங்கிக்கொண்டு, சக மனிதனை காயப்படுத்துபவர்களைவிட உன்னதமான, மனிதனாய் தான் அபிராமியின் கண்களில் விழுகிறான் குணா.
ஆமாம் யார் அந்த குணா? வாழ்க்கை, கல் போல கீழே விழும் என்று கூறிய டாக்டரிடம், தான் இறகைப் போல் பறக்க நினைப்பவன் என்று கூறிய பைத்தியக்காரன். காதல் எப்படியான உணர்வென்பதை மனித மிருகங்களுக்கு உணர்த்திய பிராந்தன். வெள்ளித்திரை எனும் தொட்டிலில் அவன் தோன்றி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் ‘கண்மணி’யின் வாயிலாய் வாழ்ந்து வந்த இந்த குணாவைப் பற்றி...
பட இயக்குநர் சந்தானபாரதிக்கு அது வாழ்நாள் அனுபவமாய் அமைந்திருக்கும். ஆடையமைப்பு, உடல்மொழி போன்றவற்றில் மட்டும் மாற்றம் செய்யாமல், தோற்றத்தையே மாற்றி, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார் கமல். தன் பொன்னிற தேகத்தில் கரியைப் பூசிக்கொண்டு மனநோயாளியாய் வாழ்ந்து காட்டினார். ரேகா, ஜனகராஜ், எஸ்.பி.பி, கிரிஷ் கர்னாட் என்று நிறைய நடிகர்கள். ஆனாலும் படம் முழுவதுமே கமல் தான் ஒன் மேன் ஷோ.
முதன்முதலில் அபிராமியை கோவிலில் பார்த்த தருணம்.....குழந்தை முகத்தோடும் சரி, அவளைத் தூக்கிக்கொண்டு மதிகெட்டான் சோலையில் சுற்றித் திரிந்த காட்சிகளிலும் சரி, ஒவ்வொரு காட்சியிலும், ஸ்கோர் செய்த கமல், ஒரு மனநோயாளியாக கண்முன் வாழ்ந்திருப்பார். இதெற்கெல்லாம் பலம் தருகிறது இளையராஜாவின் இசை. தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றை குணாவின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இசைஞானியின் அந்த மெட்டுகள் காதலை ஒவ்வொரு காதுக்கும் கடத்தின.
‘கண்மணி அன்போடு காதலன்’ பாட்டு இன்று சந்தோஷ் நாராயனனை ரசிக்கும் ‘ஜென் Z’ யுவ/யுவதிகளின் பிளே-லிஸ்டிலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். காதலனின் உணர்வை அப்படிய கடத்திச் செல்லும் வாலியின் வரிகள் காலத்தை வென்றவை. இன்னும் நிலைத்து நிற்பவை. இவர்களுடன் கானகத்தையும் காதலையும் ஒருசேரப் பதிவு செய்திருக்கும் வேனுவின் ஒளிப்பதிவு. வசனமும் மெட்டுகளும் சேர்ந்து ஒலித்த அந்தப் பாடல், என அனைத்துமே சினிமாவின் மைல்கல். காதலிகளுக்குக் கடிதம் எழுத நினைக்கும் ஒவ்வொருவரின் ஆப்லங்கேடாவிலும், முதலில் ஸ்டிரைக் ஆவது நிச்சயம் கண்மணியும் அபிராமியும் தான்.
இவர்களைத் தாண்டி, நிச்சயம் பேசவேண்டிய ஓர் நபர், ஜான். இந்த சரித்திரக் காவியத்தின் திரைக்கதையாசிரியர். குணா என்னும் பைத்தியக்காரக் கதாபாத்திரத்தை ரோமியோவிற்கும் மஜ்னுவிற்கும் நிகராக்கியவர். தன்னை ஒருவன் துப்பாக்கியால் சுட்டபோது, பொறுமையாய் பேசிக்கொண்டிருந்தவன், சிறு குருவியைக் கொன்றதனால் வெகுண்டெழுகிறான். தன் கற்பனையில் தோன்றிய பெண்ணுக்காக தன் வாழ்க்கையையே இழக்கவும் தயாராயிருக்கிறான். இப்படியொரு கதாப்பாத்திரம் தந்த ஜானிற்கு கோடி லைக்ஸ்.
அபிராமியை அவன் சிறைபிடித்திருந்தான், ஆனால் அவளிடம் வன்மம் காட்டவில்லை. தெய்வமாய், தேவதையாய் மட்டுமே பாவித்தான். காதல் வெறும் உடல் சார்ந்த உணர்வில்லை என்பதை மிக அற்புதமாகச் சொன்ன இடத்தில்தான் குணா வெற்றியடைகிறது. அவளுக்காக எதையும் செய்ய துணிந்தவன். பெண்மையை மதிக்கத்தெரிந்த அவனைப் போன்றவர்கள் இந்த உலகில் பைத்தியமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
எத்தனையோ படங்களில், காட்சிகளில் இந்தப் படமும் அதன் காட்சிகளும் இமிடேட் செய்யப்பட்டதுண்டு. ஆனால் இதுவரை அப்படத்தை ரீமேக் செய்ய யாரும் நினைக்கவில்லை. மீண்டும் இந்த குணசேகரனுக்கு உயிர்கொடுக்கமுடியுமா? என்பது சிந்திக்கவேண்டிய நிமிடங்கள்.
எந்த ஒரு மனிதனுக்கும் காதல் வரும். அந்தக் காதல் உண்மையாய் இருந்தால், அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதற்கு குணா, மிகச்சிறந்த உதாரணம். குணாவின் காதலை அந்த கடவுள் கூடப் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் அவன் சேர நினைத்த பெளர்ணமி நாளிலே அவளைப் பிரிந்துவிடுகிறான் குணா. உணர்வுகளின் ஆகச்சிறந்த ஸ்பரிசம் காதல். உண்மையான காதல்களை, காதலர்கள் புரிந்துகொள்வதில் கூட சிக்கல் ஏற்படலாம். அதையும் தாண்டி காதல் வாழும்.
நன்றி திரு. மு.பிரதீப் கிருஷ்ணா (விகடன்) E.N. Babu Kamal
#யாதெனக்கேட்டேன் #Guna #Illayaraja #SanthanaBharathi #Kamal #Kamalahasan
இதையும் வாசியுங்கள் :
மூன்றாம் பிறை - படம் முடிந்தபின்னும் எழுந்து கொள்ள மனமில்லை